குஜராத் தேர்தலில் காங்கிரஸுக்கு ஆதரவா? பட்டேல் போராட்டக்குழு சொல்வது என்ன?
பட்டேல்கள் காங்கிரஸிற்கு ஆதரவு அளிப்பது குறித்தான அறிவிப்பு நாளை வெளியாகிறது.
காந்திநகர்: பட்டேல் இன மக்கள் குஜராத் சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸிற்கு ஆதரவளிப்பது உறுதியாகி உள்ளது. அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குஜராத்தில் சட்டசபைக்கான தேர்தல் வருகிற டிசம்பர் 9 மற்றும் 14 தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெற இருக்கிறது. இந்நிலையில், 22 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் பா.ஜ.க.,வைத் தோற்கடிக்க காங்கிரஸ் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறது.
பா.ஜ.க.,வின் ஓட்டுவங்கியான பட்டேல் இன சமுதாய மக்கள் இந்த முறை அரசு மீது கோவமாக இருக்கிறார்கள். இடஒதுக்கீடு கேட்டுப் போராடி வரும் பட்டேல்கள், 24 வயதான ஹர்திக் பட்டேல் எனும் இளைஞர் தலைமையில் அணி திரண்டு உள்ளனர். ஹர்திக் யாருக்கு ஆதரவளிக்கிறாரோ அவருக்கு ஓட்டுப்போட பெரும்பான்மை பட்டேல் சமுதாயம் முடிவு செய்துள்ளது.
இதனால் எப்படியாவது ஹர்திக் பட்டேலின் ஆதரவைப் பெற காங்கிரஸ் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்திவந்தது. இந்நிலையில், கடந்த ஞாயிற்றுகிழமை காங்கிரஸ் கட்சியின் 70 தொகுதிகளுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியானது. இதில் தங்களை கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக செயல்பட்டதாகக் கூறி பட்டேல்கள் காங்கிரஸ் அலுவலகத்தை தாக்கினர்.
பட்டேல் குழுவினரும், காங்கிரஸ் தொண்டர்களும் மோதிக்கொண்டதால், காங்கிரஸிற்கு பட்டேல்களின் ஆதரவு கிடைக்குமா கிடைக்காதா என்கிற எதிர்பார்ப்பு அரசியல் அரங்கில் அதிகரித்தது. இந்நிலையில், இன்று பத்திரிகையாளர்களைச சந்தித்த பட்டேல் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் தினேஷ் பாம்பனியா, காங்கிரஸுடனான பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்திருக்கிறது.
பட்டேல்கள் காங்கிரஸிற்கு ஆதரவளிப்பது உறுதியாகிவிட்டது. நாளை அதிகார்பூர்வ அறிவிப்பை ஹர்திக் பட்டேல் வெளியிடுவார். இந்த இணைப்பு நிகழாமல் தடுக்க எத்தனையோ தகிடுதத்தங்கள் செய்தது பா.ஜ.க. அது அத்தனையும் முறியடிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.