பாஜக எம்பி கரியமுண்டா பாதுகாவலர்கள் கடத்தல்... ஜார்க்கண்ட்டில் சவால்விடும் புதிய பழங்குடிகள் இயக்கம்
ஜார்க்கண்ட் அரசுக்கு சவால்விடுகிறது பாதல்கர்ஹி பழங்குடிகள் இயக்கம்.
Recommended Video
ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநில அரசுக்கு சவால்விடும் வகையில் பாதல்கர்ஹி என்கிற பழங்குடி மக்களின் இயக்கம் தலைதூக்கி வருகிறது.
பாஜக எம்.பி.யும் லோக்சபா முன்னாள் துணை சபாநாயகருமான கரிய முண்டாவின் பாதுகாவலர்கள் 3 பேர் அண்மையில் கடத்தப்பட்டிருந்தனர். முதலில் இது மாவோயிஸ்டுகள் வேலையாக இருக்குமோ என போலீசார் சந்தேகித்தனர்.
ஆனால் அதன்பின்னர் 'பாதல்கர்ஹி' என்கிற புதிய பழங்குடி இயக்கத்தினர்தான் இந்த கடத்தலில் ஈடுபட்டிருப்பதாக தெரியவந்துள்ளது. ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், ஒடிஷா உள்ளிட்ட மாநிலங்களில் ஏற்கனவே மாவோயிஸ்டுகள் அச்சுறுத்தலாக உள்ளனர். இந்த நிலையில் பாதல்கர்ஹி என்கிற இயக்கம் தலையெடுத்திருப்பது ஜார்க்கண்ட் அரசை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.
ஜார்க்கண்ட் மாநிலத்தின் குன்ட்டி பகுதியில் உள்ள கிராம சபைகளுக்கு தன்னாட்சி அதிகாரம் கோருகிறது பாதல்கர்ஹி இயக்கம். ஜார்க்கண்ட் மாநில அரசு பழங்குடிகளின் நிலங்களை கையகப்படுத்த புதிய சட்டங்களை கொண்டு வந்தது.
"இந்த புதிய சட்டங்களின்படி நிலங்களை கையகப்படுத்த அனுமதிக்க முடியாது; ஏனெனில் பழங்குடிகளின் கிராமசபைகளுக்கு சிறப்பு அதிகாரத்தை அரசியல் சாசனம் வழங்கியிருக்கிறது. அரசியல் சாசனத்தை மாநில அரசே மதிக்காத நிலையில்தான் நாங்கள் கிராமசபைகளுக்கு தன்னாட்சி அதிகாரம் கோருகிறோம் என்கிறது பாதல்கர்ஹி இயக்கம். தன்னாட்சி அதிகாரம் பெற்ற கிராமசபைகள் ஒப்புதல் தந்தால்தான் தங்களது பகுதியில் இந்திய அரசு செயல்பட முடியும் என்கிறது பாதல்கர்ஹி.
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ஜார்க்கண்ட் அரசு அதிகாரிகள், குட்டி தனிநாடு போல தங்களது பகுதிகளை பாதல்கர்ஹி நிர்வகிக்க விரும்புகிறது. இவர்கள் மாவோயிஸ்டுகளின் அதிருப்தி குழுவுடன் தொடர்புடையவர்கள். இதை அரசு ஒருபோதும் அனுமதிக்காது என்கின்றனர்.
இதனிடையே கடத்தப்பட்ட போலீசாரை தேடி குன்ட்டி பகுதியில் உள்ள கிராமங்களில் பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது பழங்குடிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையேயான மோதல் வெடித்தது. பாதுகாப்புப் படையினர் தடியடி நடத்தினர். இம்மோதலில் ஒருவர் கொல்லப்பட்டதால் அங்கு பதற்றம் நீடிக்கிறது.