ஒவ்வொரு தீவிரவாதி கையிலும் 6 கி. ஆர்டிஎக்ஸ்.. 'பக்கா'வாக தாக்குதலில் குதித்த பாக். பயங்கரவாதிகள்
பதன்கோட்: பதன்கோட் விமானப்படை தளத்தில் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஒவ்வொருவரிடமும் 6 கிலோ ஆர்டிஎக்ஸ் வெடிபொருள் இருந்தது தெரிய வந்துள்ளது.
மிகப் பெரிய அளவில் சேதத்தை ஏற்படுத்தி இந்தியாவையே அதிர வைக்கும் நோக்கத்தில் தீவிரவாதிகள் வந்திருப்பதும் தெரிய வந்துள்ளது. ஒவ்வொரு தீவிரவாதியிடமும் 4 முதல் 5 நாட்கள் வரை தாக்குப் பிடித்துத் தாக்கக் கூடிய அளவில் ஆயுதங்களும் இருந்துள்ளன.
ஜனவரி 1ம் தேதி அதிகாலை 3.30 மணிக்குத் தொடங்கிய தாக்குதல் இன்னும் முடியவில்லை. ஒருவன் மட்டும் இன்னும் போக்குக் காட்டிக் கொண்டிருக்கிறான். இன்றைக்குள் அவனையும் பிடித்து விடுவது அல்லது தீர்த்துக் கட்டும் முனைப்புடன் பாதுகாப்புப் படையினர் செயல்பட்டு வருகின்றனர்.
கடைசி புல்லட் தீரும் வரை சுடட்டும்
தற்போது மிச்சம் உள்ள தீவிரவாதி வசம் உள்ள துப்பாக்கி தோட்டாக்கள் காலியாகும் வரை அவனை சுட விட்ட நமது பாதுகாப்புப் படையினர் பொறுத்திருந்து பிடிக்கும் திட்டத்தில் உள்ளனராம்.
அதி முக்கியப் பகுதியில் புகவில்லை
தீவிரவாதிகளை விமானப்படைத் தளத்தின் நான் டெக்னிக்கல் பகுதிக்குள்ளேயே பாதுகாப்புப் படையினர் முடக்கி விட்டனர். இதனால்தான் தீவிரவாதிகளால் தாங்கள் நினைத்ததை சாதிக்க முடியாமல் போய் விட்டது.
வெடிபொருள் வேஸ்ட்
இதன் காரணமாகவே அவர்களிடம் மிகப் பெரிய அளவில் வெடிபொருட்கள் இருந்தும் கூட அதை அவர்களால் பயன்படுத்த முடியாமலும் போய் விட்டது. இது நமது படையினரின் புத்திசாலித்தனமான, துரிதமான நடவடிக்கைக்கு கிடைத்த வெற்றியாக கருதப்படுகிறது.
சுவரில் ஏறித் தப்ப முயன்றபோது
நேற்று கொல்லப்பட்ட 5வது தீவிரவாதி சுவர் ஒன்றில் ஏற முயன்றபோது சுட்டுக் கொல்லப்பட்டான். இன்னொரு தீவிரவாதி மட்டும் உள்ளுக்குள் பதுங்கியிருந்து போக்குக் காட்டிக் கொண்டிருக்கிறான்.
மிகுந்த முன்ஜாக்கிரதையுடன்
விமானப்படைத் தளத்தின் முக்கியப் பகுதிக்குள் இவன் நுழைந்து விடக் கூடாது என்பதால்தான் பாதுகாப்புப் படையினர் மிகவும் கவனமாக, முன்ஜாக்கிரதையுடன் செயல்பட்டு வருகின்றனராம்.
சாக வந்தவனை சமாளிப்பது கடினம்
இந்தத் தாக்குதல் குறித்து ஒரு அதிகாரி ஒன்இந்தியாவிடம் கூறுகையில், இந்தத் தீவிரவாதிகள் சாவை உறுதி செய்து கொண்டே தாக்குதலுக்கு வந்தவர்கள். சாவதற்காகவே வந்தவன் எதையும் செய்யத் துணிவான். அப்படிப்பட்டவர்களைச் சமாளிப்பது சற்று கடினமானதுதான். ஆனால் நமது பாதுகாப்புப் படையினர் அவர்களை வெற்றிகரமாக சமாளித்துள்ளனர் என்றார்.