மெளலானா மசூத் அசாரைக் கைது செய்ய வேண்டும்.. பாக்.குக்கு 3 நாள் டைம் தர இந்தியா முடிவு
டெல்லி: பஞ்சாப் மாநிலம் பதன்கோட் விமானப்படைத் தளத்தில், பயங்கரவாத தாக்குதலை மேற்கொண்ட ஜெய்ஸ் இ முகம்மது அமைப்பு மீது நடவடிக்கை எடுக்க பாகிஸ்தான் அரசுக்கு 3 நாள் அவகாசம் தரவுள்ளது இந்தியா. இந்த 3 நாட்களுக்குள் பாகிஸ்தான் அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால், பாகிஸ்தானுடன் நடத்தத் திட்டமிட்டுள்ள பேச்சுக்களை ரத்து செய்ய இந்திய அரசு முடிவு செய்துள்ளதாம்.
பேச்சுக்களை ரத்து செய்வது தொடர்பாக இதுவரை மத்திய அரசிடமிருந்து எந்த தகவலும் இல்லை என்ற போதிலும் 3 நாட்கள் வரை காத்திருந்து பார்த்து விட்டு பின்னர் பேச்சுக்களை ரத்து செய்யும் அறிவிப்பை மத்திய அரசு வெளியிடலாம் என்று தெரிகிறது.
இதற்கிடையே பதன்கோட் தீவிரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக பஞ்சாப் மாநில போலீஸ், மத்திய உளவுத்துறை, தேசிய புலனாய்வு ஏஜென்சி ஆகியவை ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றன. இவர்களின் கூட்டு செயல்பாடு காரணமாகவே மிகப் பெரிய அசம்பாவிதத்தைத் தவிர்க்க முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெய்ஸ் இ முகம்மதுக்கு எதிரான ஆதாரங்கள்
தற்போது ஜெய்ஸ் இ முகம்மது அமைப்புக்கு எதிரான அனைத்து ஆதாரங்களையும் பக்காவாக திரட்டி வருகின்றனர். ஒரு தகவல் விடாமல் அனைத்தையும் சேகரித்து வருகின்றனர்.
நாடாளுமன்றத் தாக்கிய கும்பல்
இதே கும்பல்தான் பல வருடங்களுக்கு முன்பு நாடாளுமன்றம் மீது தாக்குதல் நடத்தியது என்பது நினைவிருக்கலாம். இந்த அமைப்பின் தலைவனாக செயல்படுவது மெளலானா மசூத் அசார் ஆவார்.
வாஜ்பாய் அரசால் விடுவிக்கப்பட்டவன்
இந்த மெளலானா மசூத் அசார் வேறு யாருமல்ல, முன்பு வாஜ்பாய் தலைமையிலான பாஜக அரசு இருந்தபோது இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் காந்தஹாருக்கு கடத்தப்பட்டது. அப்போது மத்திய அரசால் 3 தீவிரவாதிகள் விடுவிக்கப்பட்டனர். அவர்களில் ஒருவன்தான் இந்த மசூத் அசார்.
தொடர் ஆலோசனைகள்
பதன்கோட் தாக்குதல் தொடர்பாக டெல்லியில் தொடர்ந்து ஆலோசனைகள் நடந்து வருகின்றன. முதலில் பாதுகாப்புத்துறை அமைச்சர் தலைமையில் நடந்தது. பின்னர் வெளியுறவுத்துறை அமைச்சர் தலைமையில் நடந்தது. மோடி தலைமையில் ஒரு முக்கியக் கூட்டம் நடந்தது.
3 நாள் டைம் கொடுக்க திட்டம்
இந்த ஆலோசனைகளின் இறுதியில் ஜெய்ஸ் இ முகம்மது அமைப்புதான் இந்த செயலை செய்துள்ளது என்பது நிரூபணமாகியுள்ளதால், அந்த அமைப்பு மீது கடும் நடவடிக்கை எடுக்க பாகிஸ்தானை கேட்டுக் கொள்வது என்றும், 3 நாள் அவகாசம் தருவது என்றும் அதன் பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுப்பது என்றும் மத்திய அரசு முடிவு செய்துள்ளதாம்.
பேச்சுக்கள் ரத்தாகும்
பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்காவிட்டால் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான பேச்சுக்கள் முதல் கட்டமாக ரத்து செய்யப்படும் என்று தெரிகிறது. மேலும் பதன்கோட் விமானதளத்தில் தாக்குதல் நடத்தி கொல்லப்பட்ட தீவிரவாதிகள் பாகிஸ்தானின் பவல்பூரிலிருந்து வந்தவர்கள் என்பது நிரூபணமாகியுள்ளது. அதுகுறித்த தொலைபேசி உரையாடல் ஆதாரத்தையும், கொல்லப்பட்ட தீவிரவாதிகளின் டிஎன்ஏ சோதனை ஆதாரத்தையும் சேகரித்து பாகிஸ்தானிடம் கொடுத்து மெளலானா மசூத் அசாரைக் கைது செய்யுமாறு பாகிஸ்தானை இந்தியா நிர்ப்பந்திக்கும் என்று தெரிகிறது.
மீண்டும் லைம்லைட்டுக்கு வந்த அஸார்
மசூத் அஸார் கடந்த சில வருடங்களாக அமைதியாக இருந்து வந்தான். சமீபத்தில்தான் அவனை பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ மீண்டும் முன்னுக்கு கொண்டு வந்தது. தற்போது இவனை வைத்து இந்தியாவில் தாக்குதலை நடத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.