பதன்கோட் தாக்குதல்: விமானப்படை தளத்தில் பணியாற்றும் யாரேனும் உதவினரா?: என்ஐஏ விசாரணை
டெல்லி: பதன்கோட் தாக்குதல் வழக்கில் விமானப்படை தளத்தில் உள்ள யாராவது உதவி செய்திருக்கிறார்களா என்ற கோணத்தில் தேசிய புலனாய்வு அமைப்பினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பஞ்சாப் மாநிலம் பதன்கோட்டில் உள்ள விமானப் படை தளத்திற்குள் கடந்த மாதம் 2ம் தேதி தீவிரவாதிகள் நுழைந்து தாக்குதல் நடத்தினர். இதில் பாதுகாப்பு படையைச் சேர்ந்த 7 பேர் பலியாகினர். தாக்குதல் நடத்திய 6 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர்.
தீவிரவாதிகளில் இரண்டு பேர் தாக்குதல் நடத்துவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பே விமானப்படை தளத்திற்குள் நுழைந்தது தெரிய வந்துள்ளது. 4 தீவிரவாதிகள் ஜனவரி 2ம் தேதி விமானப்படை தள சுவரில் ஏறி உள்ளே குதித்துள்ளனர்.
தீவிரவாதிகள் 60 கிலோ எடை கொண்ட வெடிபொருட்கள், ஆயுதங்களுடன் எப்படி உள்ளே நுழைந்தனர் என்ற கேள்வி எழுந்துள்ளது. தீவிரவாதிகளுக்கு விமானப்படை தளத்தில் இருந்து யாராவது உதவியிருக்கிறார்களா என்ற கோணத்தில் தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்தி வருகிறது.
தீவிரவாதிகள் விமானப்படை தளத்திற்கு தீ வைக்க திட்டமிட்டதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. அங்கிருந்த விமானங்கள் மீது வீச வெடிமருந்துகளை கூட எடுத்து வந்துள்ளனர். தீவிரவாதிகள் விமானப்படை தளத்திற்கு அருகே வெடி பொருட்களை இரண்டு நாட்களாக வைக்க யாராவது உதவியிருக்கக்கூடும். அந்த நபர் விமானப்படை தளத்தில் உள்ளவரா என்று விசாரணை நடந்து வருகிறது.
இது குறித்து தேசிய புலனாய்வு அமைப்பு பலரிடம் விசாரித்துக் கொண்டிருக்கிறது.