பதன்கோட் தாக்குதல்... பயங்கரவாதிகளுக்கு உதவிய அந்த உள்ளூர் தேசதுரோகி யார்?
டெல்லி: மும்பை பயங்கரவாத தாக்குதலில் பயங்கரவாதிகளுக்கு உதவிய உள்ளூர் கறுப்பு ஆடுகள் குறித்த விசாரணையை தீவிரமாக மேற்கொண்டிருந்தால் பஞ்சாப் பயங்கரவாத தாக்குதலை முறியடித்திருக்க முடியும் என்கின்றனர் பாதுகாப்பு துறை ஆய்வாளர்கள்.
எல்லை தாண்டி ஊடுருவி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்துவதாக பாகிஸ்தான் மீது நாம் குற்றம்சாட்டி வருகிறோம். அதற்கு முன்னதாக இந்த பயங்கரவாதிகளுக்கு உதவியவர்கள் குறித்த விசாரணையை மேற்கொள்வது அவசியம்.
ஒவ்வொரு தாக்குதலின் போதும் பாகிஸ்தான், தீவிரவாதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தும்... பாகிஸ்தானும் செய்கிறோம் என கூறிக் கொண்டு எதுவும் செய்யாமலே விட்டுவிடுவது வாடிக்கையாகும்.
மும்பை பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது எந்த ஒரு நடவடிக்கையையுமே பாகிஸ்தான் எடுக்கவில்லை என்பதே நல்ல உதாரணமாகும். பதன்கோட் தாக்குதலைப் பொறுத்தவரையில் பல கேள்விகளுக்கு விடை தெரிய வேண்டிய அவசியம் இருக்கிறது.
எல்லை தாண்டி ஊடுருவிய தீவிரவாதிகள் இகாகர் சிங் ஓட்டி வந்த டாக்சியை பயன்படுத்தினர் என்பது உறுதியானபோதும் பல கேள்விகளுக்கு விடை கிடைக்க வேண்டிய நிலை உள்ளது.
இகாகர் சிங்கை கொலை செய்த தீவிரவாதிகள், அந்த டாக்சியையும் நடுவழியில் விட்டுவிட்டனர்.. அப்படியானால் பதன்கோட் விமான தளத்துக்கு அவர்கள் எப்படி வந்து சேர்ந்தனர்?
போலீஸ் எஸ்.பி. சல்வீந்தர்சிங்கை கடத்தி அவரது வாகனம் மூலமாகத்தான் பதன்கோட் விமான தளத்துக்கு தீவிரவாதிகள் வந்து சேர்ந்தார்களா?
பயங்கரவாதிகள் 2 குழுக்களாக விமான தளத்தை வந்தடைந்ததாக கூறப்படுகிறது....அப்படியானால் முதலில் ஒரு குழு விமான தளத்துக்குள் ஊடுருவி, அடுத்த குழுவும் வந்து சேரும் வரை காத்திருந்தார்களா?
அப்படியானால் முதல் குழுவினர் விமான தளத்துக்குள் ஊடுருவுவதற்கு உதவியாக இருந்தது யார்?
பாதுகாப்பு அதிகம் இருக்கும் விமான தளம் குறித்த தகவல்களை உள்ளூர் நபர்கள்தான் பயங்கரவாதிகளுக்கு தெரிவித்திருக்க முடியும் எனில் அவர்கள் யார்?
முக்கியமாக இந்த பயங்கரவாதிகள் எப்படி எல்லை தாண்டி வந்தார்கள்?
பாதுகாப்புப் படையினரைப் பொறுத்தவரையில் பைமால் பகுதியில் ஊடுருவவில்லை என்பது திட்டவட்டமாக கூறப்படுகிறது. அப்படியானால் அவர்கள் எந்த பகுதி வழியாக ஊடுருவினர்?
எல்லையில் மிக தீவிரமாக செயல்படும் கடத்தல் கும்பல்தான் இந்த ஊடுருவலுக்கு உதவியாக இருந்ததா?
சரி... அப்படி ஊடுருவிய தீவிரவாதிகளால் எப்படி 50 கிலோ எடையுள்ள வெடிமருந்துகளை கொண்டுவர முடிந்தது?
ஒருவேளை முன்கூட்டியே இந்த வெடிமருந்துகள் இந்திய பகுதிக்குள் தயாராக வைக்கப்பட்டிருந்ததா? உள்ளூர் நபர்கள் யாரேனும் இதற்கு உதவியாக இருந்தார்களா?
இத்தனை கேள்விகளுக்கும் விடை உள்ளூர் கறுப்பு ஆடு என்பதில்தான் அடங்கி இருக்கிறது.