பதன்கோட்டில் உடம்பில் 6 தோட்டாக்கள் பாய்ந்தும் தீவிரவாதிகளை எதிர்த்து போராடிய சைலேஷ்
பதன்கோட்: பதன்கோட்டில் தீவிரவாதிகள் சுட்டதில் தனது உடலில் 6 குண்டுகள் பாய்ந்தும் ஒரு மணிநேரம் போரிட்ட கருட் கமாண்டோ வீரரான சைலேஷ் தற்போது மருத்துவமனையில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார்.
பஞ்சாப் மாநிலம் பதன்கோட்டில் உள்ள விமான தளத்திற்குள் புகுந்த பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்பு படையைச் சேர்ந்த 7 பேர் பலியாகினர். 3 நாட்கள் நடந்த தாக்குதலில் தீவிரவாதிகள் அனைவரும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில் தாக்குதல் சமயத்தில் நடந்த சம்பவம் பற்றி தற்போது தகவல் வெளியாகியுள்ளது. தீவிரவாதிகள் விமானப்படை தளத்திற்குள் நுழைந்த தகவல் கிடைத்தவுடன் அதிகாலை 3 மணிக்கு கருட் கமாண்டோ பிரிவைச் சேர்ந்த 12 வீரர்கள் களத்தில் இறங்கியுள்ளனர்.
2, 2 பேராக அவர்கள் விமானப்படை தளத்தில் தீவிரவாதிகளை தேடிச் சென்றுள்ளனர். குர்சேவக் என்ற வீரர் தீவிரவாதிகளை நோக்கி சுட அவர்கள் பதிலுக்கு சுட்டதில் அவர் மீது 3 குண்டுகள் பாய்ந்தது. இருப்பினும் அவர் தீவிரவாதிகளுடன் போராடி பின்னர் பலியானார்.
குர்சேவக் இறந்தவுடன் சைலேஷ் மற்றும் கட்டல் ஆகிய வீரர்கள் குழு துப்பாக்கி மற்றும் மெஷின் கன்களுடன் தீவிரவாதிகளுடன் போராடியது. தீவிரவாதிகள் சுட்டதில் சைலேஷின் வயிற்றுப் பகுதிக்கு கீழ் 6 குண்டுகள் பாய்ந்தன. இருப்பினும் அதை பொருட்படுத்தாமல் சைலேஷ் ஒரு மணிநேரமாக தீவிரவாதிகளை எதிர்த்து போராடியுள்ளார்.
குண்டு பாய்ந்து 3 மணிநேரம் கழித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சைலேஷ் தற்போது உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார். நாட்டுக்காக தனது உயிரை மதிக்காமல் போராடிய அந்த வீரர் நலம் பெற மக்கள் பிரார்த்தனை செய்கிறார்கள். நாமும் பிரார்த்திக்கலாமே!