பெருமை தான், ஆனாலும் இழப்பு இழப்பு தானே: வீரமரணம் அடைந்தவர்களின் குடும்பத்தார் கண்ணீர்
பெங்களூர்: பதன்கோட் தீவிரவாத தாக்குதலில் வீர மரணம் அடைந்த பாதுகாப்பு படை வீரர்களின் குடும்பத்தார் அவர்களை நினைத்து பெருமைப்பட்டாலும், துயரத்தை அடக்க முடியாமல் அழுகிறார்கள்.
பஞ்சாப் மாநிலம் பதன்கோட்டில் உள்ள விமானப்படை தளத்திற்குள் கடந்த சனிக்கிழமை புகுந்த 5 தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் பாதுகாப்பு படையைச் சேர்ந்த 7 வீரர்கள் பலியாகினர். தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் அனைவரும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
பலியான வீரர்களின் உடல்கள் அவரவரின் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. வீரர்களின் உடல்களை பார்த்த அவர்களின் குடும்பத்தாரும், நண்பர்களும் கதறி அழுதனர்.
பலியான வீரர்களின் உறவினர்கள் கூறுகையில்,
எங்கள் குடும்ப உறுப்பினர் நாட்டிற்காக வீர மரணம் அடைந்தார் என்று நினைக்கையில் பெருமையாக உள்ளது. ஆனாலும் எங்களுக்கு ஏற்பட்ட இழப்பு இழப்பு தானே. தீவிரவாதிகள் ராணுவ வீரர்கள் பலரை கொலை செய்து வருகின்றனர் என்றனர் அழுகையுடன்.