பதன்கோட் தாக்குதல்: பஞ்சாப் எஸ்பிக்கு உண்மை கண்டறியும் சோதனை.. கோர்ட் அனுமதி
சண்டிகர்: பஞ்சாப் மாநில போலீஸ் எஸ்.பியான, சல்விந்தர் சிங் கொடுத்துள்ள வாக்குமூலத்தில் சந்தேகம் இருப்பதால் அவருக்கு பாலிகிராப் எனப்படும் உண்மை கண்டறியும் சோதனை நடத்த தேசிய பாதுகாப்பு ஏஜென்சி (என்.ஐ.ஏ) அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இதற்கு, நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
பஞ்சாப் மாநிலம், பதன்கோட் விமானதளத்தில் தீவிரவாதிகள் இரு வாரங்கள் முன்பு தாக்குதல் நடத்தினர். 4 நாட்கள் வரை நீடித்த சண்டை 7 ராணுவ வீரர்கள் வீர மரணம், மற்றும் 6 தீவிரவாதிகளின் சாவோடு முடிவுக்கு வந்தது.
தீவிரவாதிகள், சம்பவத்தன்று காலையில், பஞ்சாப் மாநிலத்தின், குருதாஸ்பூர் மாவட்ட போலீஸ் எஸ்.பி சல்விந்தர் சிங் பயணித்த காரை மறித்து, அவரை கடத்தி சென்றுள்ளனர். பின்னர் அவரை விட்டுவிட்டனர்.
இந்த கடத்தலுக்கும், பதன்கோட் தாக்குதலுக்கும் தொடர்பிருக்கலாம் என சந்தேகம் வலுத்துள்ளது. எஸ்.பியுடன் காரில் பயணித்தோரும், எஸ்.பியும், மாறுபட்ட வாக்குமூலங்களை அளித்துள்ளனர். எனவே சல்விந்தர் சிங்கிற்கு பாலிகிராப் எனப்படும் ஒருவகை உண்மை கண்டறியும் சோதனை நடத்த திட்டமிட்டனர் என்.ஐ.ஏ அதிகாரிகள்.
பொதுவாக உண்மை கண்டறியும் சோதனைகள் இரு வகைகளில் நடைபெறுகிறது. ஊசி மூலம் தன் வயமிழக்கும் மருந்தை சந்தேகப்படும் நபர் உடலில் ஏற்றி, உண்மையை வெளியே கொண்டுவருவது ஒரு வகையெனில், தலையில், வயர்களை இணைத்து, கம்ப்யூட்டருடன் அதை இணைத்து, மூளையின் மாறுபாடுகளை வைத்து உண்மையை கண்டறிவது, பாலிகிராப் சோதனையாகும்.
இந்த சோதனைகளுக்கு கோர்ட் அனுமதி அவசியம். எனவே, உள்துறை அமைச்சகத்தின் அனுமதியோடு, என்.ஐ.ஏ அதிகாரிகள், டெல்லி கோர்ட்டில் இதற்கான மனுவை தாக்கல் செய்திருந்தனர். கோர்ட் இன்று இவ்வனுமதியை வழங்கியுள்ளது. விரைவில் போலீஸ் எஸ்.பிக்கு பாலிகிராபிக் சோதனை நடத்தப்படும் என்று தெரிகிறது.