பதன்கோட் தாக்குதலில் தொடர்பா? உண்மை கண்டறியும் சோதனையில் பஞ்சாப் போலீஸ் எஸ்.பி பதில்
டெல்லி: பதன்கோட் தாக்குதல் சம்பவம் தொடர்பாக குருதாஸ்பூர் மாவட்ட போலீஸ் எஸ்.பிக்கு, தேசிய பாதுகாப்பு ஏஜென்சி அதிகாரிகள் ஏற்பாட்டின்பேரில் பாலிகிராப் எனப்படும், உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டது.
பஞ்சாப் மாநிலம், பதன்கோட் விமானதளத்தில் தீவிரவாதிகள் இரு வாரங்கள் முன்பு தாக்குதல் நடத்தினர். 4 நாட்கள் வரை நீடித்த சண்டை 7 ராணுவ வீரர்கள் வீர மரணம், மற்றும் 6 தீவிரவாதிகளின் சாவோடு முடிவுக்கு வந்தது.
தீவிரவாதிகள், சம்பவத்தன்று காலையில், பஞ்சாப் மாநிலத்தின், குருதாஸ்பூர் மாவட்ட போலீஸ் எஸ்.பி சல்விந்தர் சிங் பயணித்த காரை மறித்து, அவரை கடத்தி சென்றுள்ளனர். பின்னர் அவரை விட்டுவிட்டனர்.
இந்த கடத்தலுக்கும், பதன்கோட் தாக்குதலுக்கும் தொடர்பிருக்கலாம் என சந்தேகம் வலுத்துள்ளது. எஸ்.பியுடன் காரில் பயணித்தோரும், எஸ்.பியும், மாறுபட்ட வாக்குமூலங்களை அளித்துள்ளனர். எனவே சல்விந்தர் சிங்கிற்கு பாலிகிராப் எனப்படும் ஒருவகை உண்மை கண்டறியும் சோதனை நடத்த திட்டமிட்டனர் என்.ஐ.ஏ அதிகாரிகள்.
இந்த சோதனைகளுக்கு கோர்ட் அனுமதி அவசியம். எனவே, உள்துறை அமைச்சகத்தின் அனுமதியோடு, என்.ஐ.ஏ அதிகாரிகள், டெல்லி கோர்ட்டில் இதற்கான மனுவை தாக்கல் செய்திருந்தனர். கோர்ட் நேற்று இவ்வனுமதியை வழங்கியது.
இதையடுத்து, இன்று, போலீஸ் எஸ்.பி சல்விந்தர்சிங்கிற்கு பாலிகிராபிக் சோதனை நடத்தப்பட்டது. டிசம்பர் 31ம் தேதி காலை மற்றும் இரவு ஆகிய இரு நேரத்திலும், எல்லைப்புற கிராமமான பமியாலுக்கு ஏன் சென்றார் என்ற கேள்வி முக்கியமாக முன் வைக்கப்பட்டது. ஏனெனில் அந்த கிராமம் வழியாகவே தீவிரவாதிகள், பதன்கோட்டுக்கு ஊடுருவியிருந்தனர்.
பமியாலிலுள்ள அங்குள்ள வழிபாட்டுத்தலத்தில் வழிபாடு நடத்துவதற்காக சென்றதாக சல்விந்தர்சிங் பதில் கூறியுள்ளார். திரும்ப திரும்ப கேட்டாலும், அதே பதிலைத்தான் கூற முடியும் என்று சல்விந்தர் சிங் பதிலளித்துள்ளார். தீவிரவாதிகள் பொதுவாக போலீஸ்காரரை உயிரோடு விடமாட்டார்கள். உங்களை விடுவிக்க என்ன காரணம் என்ற கேள்விக்கு, நான் சீக்கியன் என்பதால் விடுதலை செய்திருக்கலாம் என்று சல்விந்தர்சிங் பதில் தெரிவித்துள்ளார்.
கேள்விக்கு கூறிய பதிலின்போது, மூளை எந்த மாதிரி செயலாற்றியது என்பதை ஆய்வு செய்து, அவர் கூறிய பதில் உண்மையா, பொய்யா என்பதை ஆய்வு முடிவு தெரிவிக்கும்.