கடத்தல்காரர்கள் போர்வையில் ஊடுருவிய பயங்கரவாதிகள்? கூட்டி வந்த "கறுப்பு ஆடு" யார்?
பதன்கோட்: நாட்டை உலுக்கிய பஞ்சாப் பதன்கோட் விமானப் படை தளம் மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் எல்லை தாண்டி ஊருவுவதற்கு உதவியாக பாதுகாப்புப் படையில் இருந்த "கறுப்பு ஆடுகள்" குறித்து தேசிய புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாகிஸ்தான்-இந்தியா சர்வதேச எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் இருந்து சுமார் 45 கி.மீ. தொலைவில் உள்ள பதன்கோட் விமான படை தளம் மீது பாகிஸ்தானில் இருந்து ஊடுருவிய பயங்கரவாதிகள் கடந்த 3 நாட்களாக தொடர் தாக்குதலை நடத்தினர். வெறும் 6 பயங்கரவாதிகள்தான் என்றாலும் நமது ராணுவத்தின் தரப்பில் 7 வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர்.
தற்போது இது குறித்து விசாரணை நடத்தி வரும் தேசிய புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகள், பாகிஸ்தானில் இருந்து இந்த பயங்கரவாதிகள் ஊடுருவியது எப்படி? அவர்களுக்கு உதவியவர்கள் யார்? யார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக தேசிய புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகள் நமது ஒன் இந்தியாவிடம் கூறியதாவது:
பாகிஸ்தானில் இருந்து இரண்டு குழுக்களாக தீவிரவாதிகள் பஞ்சாப்புக்குள் ஊடுருவி உள்ளனர். ஒரு குழுவினர் ரேஞ்ச் ரோவர் பகுதியிலும் மற்றொரு குழு பஜேரோ பகுதியிலும் ஊடுருவியிருக்கின்றனர். சரி இவர்கள் எப்படிதான் இந்தியாவுக்குள் ஊடுருவினார்கள்?
அதுவும் டிசம்பர் 25-ந் தேதியன்றே பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவக் கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் இந்த ஊடுருவல் எப்படி சாத்தியமானது? யாரேனும் மிகவும் முக்கியமான அல்லது அவர்களுக்கு நன்கு பரிச்சயமான நபர்கள் இந்த பயங்கரவாதிகளை ஊடுருவுவதற்காக அழைத்துச் சென்றனரா? என்ற கேள்வியும் எழுகிறது.
பொதுவாக எல்லைப் பகுதியில் "கடத்தல்" சம்பவங்கள் அதிகம் நடைபெறுகின்றன. சில பாதுகாப்புப் படையினரும் இது குறித்து நன்கே அறிந்தும் வைத்துள்ளனர். அப்படியான கடத்தல்காரர்கள் போர்வையில்தான் தீவிரவாதிகள் ஊடுருவியிருக்க வாய்ப்பு உள்ளது.
கடத்தல்காரர்கள் என நினைத்து தீவிரவாதிகளை அவர்கள் உள்ளே அனுமதித்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. ஏனெனில் மும்பையில் பயங்கரவாத தாக்குதல் நடத்த வந்த தீவிரவாதிகளை கடத்தல்காரர்கள் என நினைத்துதான் டீசல் கடத்தல்காரர் ஒருவர் உதவியது அம்பலமாகியிருந்தது. அதேபோல்தான் கடத்தல்காரர்கள் போர்வையில் தீவிரவாதிகள் இங்கேயும் நுழைந்திருக்கலாம்.
குறிப்பாக ஜெய்ஷ் இ முகமது அமைப்பினர் கடத்தல்காரர்களையே பயங்கரவாத தாக்குதல்களுக்கான ஸ்லீப்பர் செல்களாகவே பயன்படுத்துவதை புலனாய்வு அமைப்புகள் நன்கு அறியும். ஆகையால் கடத்தல்காரர்கள் போர்வையில் உள்ளே நுழைந்த தீவிரவாதிகளை அவர்களுக்கு பாதுகாப்பு படையில் இருந்த நன்கு பரிச்சயமான நபர்கள்தான் இந்தியாவுக்குள் நுழைய அனுமதித்திருக்க முடியும். அதனடிப்படையில்தான் தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இவ்வாறு தேசிய புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.