விவசாயிகளை சந்திக்க சென்ற ஹர்திக் படேல்... போலீசார் தடுத்து நிறுத்தம்.. ம.பி.யில் பதற்றம்
மத்திய பிரதேசத்தில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளை சந்திக்க சென்ற போது ஹர்திக் படேல் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டார். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்தூர்: வேளாண் விளை பொருட்களுக்கு நல்ல ஆதரவு விலை வழங்க வேண்டியும், விவசாயிகள் கடன் தள்ளுபடி செய்யக் கோரியும் மாநில அரசை வலியுறுத்தி பாஜக ஆட்சி நடைபெறும் மத்திய பிரதேச மாநிலத்தில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சில நாட்களுக்கு முன்பு நடந்த அந்தப் போராட்டத்தின் போது மண்ட்சாவுர் மாவட்டத்தில் விவசாயிகள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 5 பேர் பலியாயினர். அந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனால் கொந்தளித்த விவசாயிகள் தங்களுடைய போராட்டத்தை தீவிரப்படுத்தினர். இதனால் மாநிலம் முழுவதும் கொந்தளிப்பான நிலை காணப்பட்டது.
இதை முடிவுக்குக் கொண்டு வர மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் எவ்வளவோ முயற்சி மேற்கொண்டும் அதற்கு பலன் கிடைக்கவில்லை. போராட்டம் தொடர்பாக அதிகாரிகளுடன் பலகட்ட ஆலோசனையில் அவர் ஈடுபட்டார்.
அதன் பின்னர் அவர் உண்ணாவிரதம் இருந்தார். மாநிலத்தில் அமைதி திரும்பினாலும் விவசாய பயிர் கடன் தள்ளுபடி தொடர்பாக எந்த ஒரு அறிவிப்பையும் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் வெளியிடவில்லை.
இந்த நிலையில், படேல் சமூகத்தினருக்கு இட ஒதுக்கீடு கேட்டு போராட்டம் நடத்திய ஹர்திக் படேலும் பாதிக்கப்பட்ட விவசாயிகளை சந்திக்க மத்திய பிரதேசம் சென்றார்.
அவரை போலீஸ் தடுத்து நிறுத்தி கைது செய்தது. கைது செய்யப்பட்ட நிலையில் ஹர்திக் படேல் பேசுகையில், " நான் ஒன்றும் தீவிரவாதி கிடையாது. நான் பாகிஸ்தானில் இருந்து வரவில்லை. நான் ஒரு இந்திய குடிமகன். இந்தியாவில் எந்தஒரு பகுதிக்கும் நான் சுதந்திரமாக செல்ல முடியும். என்னுடைய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கொல்லப்பட்டு உள்ளனர். உறவினர்களை பார்க்கத் தான் வந்து உள்ளேன்," என்றார் கொந்தளிப்போடு.