பாட்னா குண்டு வெடிப்பு சம்பவம்: மூளையாக செயல்பட்ட தீவிரவாதி உட்பட 4 பேர் கைது
பாட்னா: கடந்த 2013ம் ஆண்டு பாட்னாவில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 27 ஆம் தேதி பீகார் மாநிலம் பாட்னாவில் நரேந்திர மோடி பங்கேற்ற பொதுக்கூட்டம் மற்றும் ரயில் நிலையத்தில் அடுத்தடுத்து எட்டு குண்டுகள் வெடித்தன. இதில் ஆறு பேர் உயிரிழந்தனர். 83 பேர் படுகாயமடைந்தனர்.
நாட்டையே உலுக்கிய இந்த தொடர்குண்டுவெடிப்பு தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், தற்போது சிமி தீவிரவாத இயக்கதைச் சேர்ந்த ஹைதர் அலியை கைது செய்த தேசிய புலனாய்வு அமைப்பினர், அவரிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில், நூமன், தஃபீக், முஸிபுல்லா ஆகிய மேலும் மூன்று பேரை கைது செய்தனர்.
இதுவரை பாட்னா குண்டுவெடிப்பு தொடர்பாக எட்டு பேரை தேசிய புலனாய்வு அமைப்பு கைது செய்துள்ளது. ராஞ்சி போலீசாருடன் இணைந்து, தேசிய புலனாய்வு அமைப்பினர் இந்த கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட ஹைதர் அலி தான் இந்த தாக்குதல் சம்பவத்துக்கு மூளையாகச் செயல் பட்டதாக சந்தேகிக்கப் படுகிறது. எனவே, தப்பியோடிய ஹைதர் தலைக்கு முன்னர் ரூ 10 லட்சம் சன்மானம் அரிவிக்கப் பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.