பாட்னா குண்டுவெடிப்பு : குற்றவாளிகள் வீட்டில் வெடிப்பொருட்களுடன் ஒசாமா போட்டோ பறிமுதல்
ராஞ்சி: பாட்னா குண்டுவெடிப்பு சதிகாரர்கள் வீட்டில் வெடிப் பொருட்களோடு, ஒசாமாவின் புகைப்படமும் பறிமுதல் செய்யப் பட்டிருப்பதாகப் போலீசார் தெரிவித்துள்ளனர்.
நேற்று, பீகார் தலைநகர் பாட்னாவில் ரயில் நிலையம், திரையரங்கு மற்றும் நரேந்திர மோடி பேசிய காந்தி மைதானத்தை சுற்றியுள்ள பகுதிகள் என மொத்தம் 7 இடங்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்ததில், 5 பேர் பலியாகினர். 80க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர்.
ரயில் நிலைய கழிவறை அருகே குண்டு வெடித்த போது அங்கிருந்து சந்தேகப்படும்படியாக தப்பி ஓடிய ஒருவனை போலீசார் வளைத்து பிடித்து விசாரித்தனர். மேலும், அடுத்தடுத்து நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்புகளில் மேலும் 2 பேரையும் சந்தேகத்தின் பேரில் கைது செய்தனர் போலீசார்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தொடர் குண்டு வெடிப்பில் ஈடுபட்ட குற்றவாளிகள் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து, பிடிபட்டவர்களின் விபரங்களை பாட்னா போலீசார் ஜார்கண்ட் போலீசாருக்கு தெரிவித்தனர்.
உடனடியாக, ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சியின் துர்வா பகுதியில் உள்ள குற்றவாளி ஒருவனின் வீட்டில் அம்மாநிலப் போலீசார் நேற்று நள்ளிரவு அதிரடி சோதனை நடத்தியதில், அந்த வீட்டில் வெடிப் பொருட்கள், டெட்டனேட்ர் ஒயர், டைமர், குக்கர், தீவிரவாத குழுக்களின் துண்டு பிரசுரங்கள் மற்றும் அமெரிக்க தாக்குதலில் சுட்டுக் கொல்லப்பட்ட அல் கொய்தா தீவிரவாத இயக்க தலைவன் ஒசாமா பின் லேடனின் புகைப்படம் ஆகியவை போலீசாரிடம் சிக்கியுள்ளது.
குண்டு வெடிப்பில் தொடர்புடைய மேலும் சிலரது வீடுகளிலும் அடுத்தடுத்து சோதனை மேற்கொண்ட போலீசார் அதுகுறித்த தகவல்களை வெளியிட மறுத்து விட்டனர்.