5வது முறை சிக்கிம் முதல்வராக பதவியேற்ற பவன் சாம்லிங்! ஜோதிபாசு ரெக்கார்டை தாண்டுகிறார்!
காங்டாங்: சிக்கிம் மாநில முதலமைச்சராக தொடர்ந்து 5வது முறையாக பதவியேற்று பவன் குமார் சாம்லிங் சாதனை படைத்துள்ளார்.
லோக்சபா தேர்தலுடன் நடைபெற்ற சிக்கிம் மாநில சட்டசபை தேர்தலில் மொத்தம் உள்ள 32 தொகுதிகளில் 22 இடங்களைக் கைப்பற்றியது சிக்கிம் ஜனநாயக முன்னணி.
இதைத் தொடர்ந்து சிக்கிம் ஜனநாயக முன்னணியில் புதிய எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் பவன்குமார் சாம்லிங் மீண்டும் முதல்வராக நேற்று தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரை ஆட்சி அமைக்க ஆளுநரும் அழைப்பு விடுத்தார்.
இன்று அம்மாநிலத்தில் ஆளுநர் ஸ்ரீநிவாஸ் பாட்டில் சாம்லிங்குக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். அவருடன் மேலும் 11 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.
சிக்கிம் மாநிலத்தில் 1994ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து சாம்லிங் முதல்வராக பதவி வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேற்கு வங்க மாநிலத்தில் 1977ஆம் ஆண்டு முதல் 2000ஆம் ஆண்டு வரை 23 ஆண்டுகாலம் ஜோதிபாசு முதல்வராக இருந்து சாதனை படைத்தார். தற்போது சாம்லிங் அந்த சாதனையை தாண்டும் வகையில் பயணத்தை தொடங்கியிருக்கிறார்.