அரசியலில் பவன் கல்யாண்தான் எனது முக்கிய எதிரி: சிரஞ்சீவி ஆவேசம்
ஹைதராபாத்: அரசியல் வாழ்க்கையில் பவன்கல்யாண்தான் என் முக்கிய எதிரி என்று அவரது அண்ணனும், மத்திய அமைச்சருமான சிரஞ்சீவி கூறியுள்ளார்.
சிரஞ்சீவியின் தம்பி நடிகர் பவன் கல்யாண் சமீபத்தில் ‘ஜனசேனா' என்ற புதிய கட்சியை தொடங்கினார். கட்சியை அறிமுகப்படுத்தி பேசிய அவர், ‘‘தெலுங்கு மக்களை பிரித்த காங்கிரசை அடியோடு அழிப்பேன்'' என்றார்.
பவன்கல்யாண் புதிய கட்சி குறித்து அண்ணன் சிரஞ்சீவி இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
அண்ணனாக ஆசி
ஜனநாயக நாடான இந்தியாவில் அரசியல் கட்சியை தொடங்க அனைவருக்கும் உரிமை உண்டு. அந்த வகையில் பவன்கல்யாண் ‘ஜனசேனா' என்ற கட்சியை தொடங்கி உள்ளார். ஒரு அண்ணன் என்ற முறையில் எனது ஆசி அவருக்கு எப்போதும் உண்டு.
என் முக்கிய எதிரி
அதே நேரத்தில் காங்கிரசை அழிப்பேன் என்று அவர் கூறுவதை காங்கிரஸ் காரன் என்ற முறையில் எதிர்க்கிறேன். காங்கிரசை எதிர்க்கும் அவர் எனக்கு முக்கிய எதிரிதான். அவர் மட்டும் அல்ல யார் காங்கிரசை எதிர்த்தாலும் அவர்கள் எனது எதிரிதான்.
பாதயாத்திரை
ஆந்திரா முழுவதும் வெள்ளிக்கிழமை முதல் பாதயாத்திரை செல்கிறேன். அப்போது காங்கிரஸ் மீது சுமத்தப்படும் வீண்பழியை துடைக்கும் வகையில் பிரசாரம் செய்வேன்.
காங்கிரசை அழிக்க முடியாது
காங்கிரசை அழிக்க முடியாது என்பது அனைவருக்கும் பின்னர் தெரியவரும் என்று சிரஞ்சீவி கூறினார்.