ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட மாணவர்களின் குடும்பத்திற்கு ரியல் பவர்ஸ்டார் ரூ.5 லட்சம் நிதி
ஹைதராபாத்: இமாச்சல பிரதேசத்தில் பியாஸ் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட மாணவ, மாணவியரின் குடும்பத்திற்கு பவர் ஸ்டார் பவன் கல்யாண் தலா ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்கியுள்ளார்.
இமாச்சல பிரதேசத்திற்கு சுற்றுலா சென்ற விஎன்ஆர் விஞ்ஞான ஜோதி இன்ஸ்டிடியூட் ஆப் என்ஜினியரிங் அன்ட் டெக்னாலஜி கல்லூரியைச் சேர்ந்த 6 மாணவிகள் மற்றும் 18 மாணவர்கள் பியாஸ் ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி நீரில் அடித்துச் செல்லப்பட்டனர். இதில் 2 மாணவிகள் உள்பட 5 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் நடிகரும், ஜனசேனா கட்சி தலைவருமான பவன் கல்யாண் நீரில் அடித்துச் செல்லப்பட்ட மாணவ, மாணவியரின் குடும்பத்தாருக்கு தலா ரூ.5 லட்சம் வழங்கியுள்ளார். மாணவர்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்ட செய்தி அறிந்து பவன் மனாலி கிளம்பிச் சென்றார். அங்கு உயிர் பிழைத்த மாணவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.
பாதிக்கப்பட்ட குடும்பத்தாருக்கு உதவ முன்வருமாறு அவர் தெலுங்கு திரை உலகினரை கேட்டுக் கொண்டுள்ளார்.