நாட்டு வளர்ச்சிக்கு மட்டும் நாங்கள்-ஆனால் நிறத்தால் வேறுபாடா?தருண் விஜய் மீது பவன் கல்யாண் பாய்ச்சல்
நாட்டின் வளர்ச்சிக்கு மட்டும் தென்னிந்தியர்களின் பங்களிப்பை எடுத்துக் கொள்ளும் நீங்கள், தோலின் நிறத்தை வைத்து பாகுபாடு பார்ப்பதா என்று பாஜக மாஜி எம்பி தருண் விஜய்யை கடுமையா சாடியுள்ளார்.
ஹைதராபாத்: நிறங்களை வைத்து தென்னிந்தியர்கள், வடஇந்தியர்கள் என பாகுபடுத்தி பாஜக முன்னாள் எம்பி தருண் விஜாய் பேசிய கருத்துகளுக்கு நடிகர் பவன் கல்யாண் கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் அண்மையில் ஆப்பிரிக்கா மாணவர்கள் தாக்கப்பட்டது சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக தொலைக்காட்சி நிறுவனத்துக்கு பாஜக முன்னாள் எம்.பி. தருண் விஜய் அளித்த பேட்டியில், இந்தியர்கள் இனவெறியர்கள் இல்லை. நாங்கள் இனவெறியர்களாக இருந்தால் எப்படி தென்னிந்திய மக்களுடன் இணைந்து வாழ முடியும்? இந்தியாவிலும் கறுப்பர்கள் உள்ளனர். எங்களைச் சுற்றியும் கறுப்பின மக்கள் உள்ளனர் என்று இனவெறியை தூண்டும் வகையில் அவர் கூறியிருந்தார்.
இதற்கு சமூகவலைதளங்களில் கடும் கண்டனங்கள் எழுந்தன. இதை தொடர்ந்து தனது கருத்துக்கு அவர் வருத்தம் தெரிவித்தார். இந்நிலையில் இவரது கருத்து குறித்து நடிகர பவன் கல்யாண் ஆவேசமடைந்து டிவிட்டரில் கருத்து வெளியிட்டுள்ளார்.
அதில், வடஇந்தியா, தென்னிந்தியர்களிடையே இனவெறியில் கருத்துகளை தெரிவித்த தருண் விஜய்க்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். அவரது சர்ச்சைக்குரிய கருத்துகள் அவரது வெற்று மன்னிப்பால் மறந்துவிட முடியாது. நாடு பரிதாபத்துக்குரிய வகையில் உள்ளதற்கு இதுவே நல்ல உதாரணம்.
இதுபோன்ற சின்ன புத்தியை உடைவர்கள் ஒட்டுமொத்த தேசத்துக்கும் முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு அவர்களை அரசு அனுமதித்துள்ளது. இவர்களை போன்றோருக்கு நாட்டின் வளர்ச்சிக்கு மக்களின் பங்களிப்புகள் மட்டும் வேண்டும். ஆனால் மக்களின் தோலின் நிறத்தின் அடிப்படையில் கருத்துகளை தெரிவித்து பாகுபாடு காட்டுவர் என சாடியுள்ளார்.