ஜனாதிபதி தேர்தல்: சோனியா மற்றும் ராகுலுடன் சரத் பவார் தீவிர ஆலோசனை!
ஜனாதிபதி தேர்தல் விரைவில் நடக்கவுள்ள நிலையில், காங்கிரஸ் தலைவர் சோனியா மற்றும் ராகுலுடன், சரத்பவார் தீவிர ஆலோசனை நடத்தியுள்ளார்.
டெல்லி: ஜனாதிபதி தேர்தலில், வேட்பாளராக யாரை நிறுத்துவது என்பது தொடர்பாக, காங்கிரஸ் தலைவர் சோனியா மற்றும் ராகுல் காந்தி ஆகியோருடன் தேசியவாத கட்சித் தலைவர் சரத் பவார் ஆலோசனை நடத்தியுள்ளார்.
தற்போது ஜனாதிபதியாக உள்ள பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் முடிவடைய உள்ளது. இதையடுத்து, புதிய ஜனாதிபதி தேர்தலுக்கான பணிகள் தொடங்கியுள்ளன.
ஆளும் பாஜக சார்பாக, யார் நிறுத்தப்படுவார் என பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதேசமயம், எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றுசேர்ந்து, காங்கிரஸ் தலைமையில் பொது வேட்பாளரை நிறுத்த திட்டமிட்டுள்ளன. இதற்கு, திரிணாமூல் காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்தும் உள்ளன.
இந்நிலையில், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் இதுதொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா மற்றும் துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரை டெல்லியில் நேரில் சந்தித்து தீவிர ஆலோசனை நடத்தியுள்ளார். இதுகுறித்து பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜனாதிபதி தேர்தலில் என்னைத் தவிர யார் போட்டியிட்டாலும் ஆதரவு தர தயாராக உள்ளேன். காங்கிரஸ் கட்சியின் தலைமையில் பொது வேட்பாளரை நிறுத்துவது நல்ல முடிவு என்றார்.