நான் மராட்டிய முதல்வர் வேட்பாளரல்ல... தொண்டர்களின் கோரிக்கையை நிராகரித்தார் சரத்பவார்
மும்பை: மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் தான் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முதல்வர் வேட்பாளராகப் போவதில்லை எனக் கூறி தொண்டர்களின் கோரிக்கையை அக்கட்சியின் தலைவர் சரத்பவார் நிராகரித்துள்ளார்.
வருகிற செப்டம்பர் - அக்டோபர் மாதவாக்கில் மராட்டிய மாநில சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. எனவே, தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. இந்நிலையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவாரை இத்தேர்தலில் முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என தொண்டர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
மராட்டிய முதல்வராக சுமார் ஆறரை ஆண்டுகள் பதவியில் இருந்த சரத்பவார், அதன்பிறகு தேசிய அரசியலுக்கு சென்று விட்டார். அவர் தேசிய அரசியலுக்கு சென்று 19 ஆண்டுகள் ஆகி விட்டது.
இந்நிலையில், தொண்டர்கள் சரத்பவார் மீண்டும் மாநில அரசியலுக்கு வர வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளனர். ஆனால் தொண்டர்களின் கோரிக்கையை சரத்பவார் நிராகரித்து விட்டார்.
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் 15-வது ஆண்டு தின விழாவில் இது தொடர்பாக சரத்பவார் கூறியதாவது, ‘நான் முதல்வர் வேட்பாளர் அல்ல, ஒருங்கிணைந்த தலைமையின் கீழ் தேர்தலை சந்திக்க வேண்டும்' என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், தற்போது டெல்லி ராஜ்யசபா எம்.பி.யாக இருக்கும் தான், அதிலேயே திருப்தி அடைவதாகவும் அவர் கூறியுள்ளார்.