ஆக்ரா - லக்ணோ சாலையை 3 மணிநேரத்திற்குள் கடந்தால் அபராதம்: உ.பி அரசு அதிரடி நடவடிக்கை!
லக்ணோ: ஆக்ரா - லக்ணோ இடையிலான அதிவிரைவு சாலையை 3 மணிநேரத்திற்குள் கடக்கும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலாத் தலம் ஆக்ரா. இங்கிருந்து அம்மாநில தலைநகர் லக்ணோவுக்கு அதிவிரைவு சாலை அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 2017ல் போக்குவரத்து துவங்கினாலும், கடந்த ஆண்டு ஜனவரியில்தான் முறைப்படி திறப்பு விழா கண்டது. இந்தியாவின் மிக நீளமான எக்ஸ்பிரஸ் சாலை என்ற பெருமையையும் இது பெற்றது.
சுற்றுச்சூழலுக்கு உகந்த அம்சங்களுடன் 6 வழித்தடங்கள் கொண்ட பசுமை சாலையாகவும் இந்த அதிவிரைவு சாலை தெரிவிக்கப்படுகிறது. இதன் குறிப்பிட்ட பகுதிகளில் போர் விமானங்களை அவசர காலத்தில் இயக்கும் தன்மையுடன் அமைக்கப்பட்டு இருக்கிறது.
இந்த உலகத் தரம் வாய்ந்த சாலை மூலமாக ஆக்ராவிலிருந்து லக்ணோவிற்கு 7 மணிநேரமாக இருந்த பயண நேரம் 3.30 மணியாக குறைந்தது. மேலும், இது டெல்லி - லக்ணோ இடையிலான பயண நேரத்தை 6 மணிநேரமாக குறைந்ததால், வாகன ஓட்டிகளுக்கு வரப்பிரசாதமாக அமைந்தது.
உலகத்தரம் வாய்ந்த கட்டமைப்பு அம்சங்களை பெற்றிருக்கும் இந்த சாலையில் வாகனங்கள் மணிக்கு 120 கிமீ வேகம் வரை செல்ல முடியும். பனி மூட்டம் மற்றும் விபத்துக்களின்போது தானியங்கி முறையில் போக்குவரத்து மேலாண்மை செய்யும் வசதியுடன் அமைக்கப்பட்டு இருக்கிறது.
அன்புள்ள மருத்துவருக்கு.. 50 காசு போஸ்ட் கார்டில் வந்த கடிதம்.. நெகிழ்ந்து போன தமிழிசை
விபத்துக்களை தவிர்க்கும் விதத்தில், இந்த சாலையில் கார்கள் 100 கிமீ வேகம் வரையிலும், இதர கனரக வாகனங்கள் 60 கிமீ வேகம் வரையிலும் செல்வதற்கு வேக வரம்பு நிர்ணயிக்கப்பட்டது. எனினும், இந்த சாலையில் வாகன ஓட்டிகள் மிக அதிவேகத்தில் இயக்குவது வழக்கமாக இருந்து வந்தது. இதனால், விபத்துக்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்தது.
கடந்த 2017ம் ஆண்டு ஆகஸ்ட் முதல் இதுவரை 1,900 விபத்துக்கள் நடந்துள்ளன. இதில், 240 பேர் உயிரிழந்துள்ளனர். வேக வரம்பு, விழிப்புணர்வு பிரச்சாரங்கள் கைகொடுக்கவில்லை. எனவே, இந்த சாலையில் விபத்துக்களை கட்டுப்படுத்த உத்தரபிரதேச அரசு அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது.
அதன்படி, ஆக்ரா - லக்ணோ இடையிலான எக்ஸ்பிரஸ் சாலையை 3 மணிநேரத்தில் கடக்கும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. குறிப்பாக, கார்களுக்கு 3 மணிநேரமாக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.
வாகனத்தின் வகைக்கு தக்கவாறு நேர வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வாகனம் சுங்கச் சாவடியில் நுழையும்போதே, நேரம் குறித்துக் கம்ப்யூட்டரில் பதிவாகிவிடும். மறுமுனையில் உள்ள கடைசி சுங்கச் சாவடியிலிருந்து வாகனம் வெளியேறும்போது, 3 மணிநேரத்தில் கடந்திருந்தால் அபராதம் விதிக்கப்படுகிறது.
இந்த புதிய அபராத நடைமுறைக்கு கை மேல் பலன் கிட்டியுள்ளதாக தெரிகிறது. அதாவது, விபத்துக்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாக எக்ஸ்பிரஸ் சாலை நிர்வாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தற்போது வாகன ஓட்டிகள் வேகத்தை சற்றே தணித்திருப்பதாக தெரிகிறது.