தோழியை அடைவதற்காக தொழிலதிபரிடம் ரூ.10 கோடி கேட்டு மிரட்டிய கோகுல்! விசாரணையில் அம்பலம்
பெங்களூர்: தோழியின் கணவரை போலீசாரிடம் மாட்டிவிடுவதற்காக அவரை தீவிரவாதி போல சித்தரித்த கோகுல், இதற்காக விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததோடு மட்டுமின்றி, தொழிலதிபர் ஒருவரிடம் ரூ.10 கோடி கேட்டு மிரட்டிய தகவலும் அம்பலமாகியுள்ளது.
திருச்சூரை சேர்ந்த கோகுல் கடந்த சனிக்கிழமை அதிகாலையில், டெல்லி மற்றும் பெங்களூரில் இருந்து புறப்படும் சில விமானங்களில் வெடிகுண்டு இருப்பதாக வாட்ஸ்அப் மூலம் அதிகாரிகளுக்கு தகவல் அளித்தார். தொலைபேசியில் இருந்தும் பேசி மிரட்டினார்.
ஐஎஸ்ஐஎஸ்
அதேபோன்று, டெல்லியை சேர்ந்த ஒரு தகவல் தொடர்பு நிறுவன அதிபருக்கும் போன் செய்துள்ளார். அவர் போனை எடுக்காததால், அவரது வாட்ஸ்அப் எண்ணுக்கு, ஒரு மெசேஜ் அனுப்பியுள்ளார். அதில், "நான் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்திற்காக நிதி திரட்டுகிறேன். எனவே, ரூ.10 கோடியை அளிக்க வேண்டும். அல்லது கடும் விளைவுகளை சந்திப்பாய்" என்று கூறப்பட்டிருந்தது.
சிம்கார்டு
மேலும் ஒரு வங்கி கணக்கு எண்ணும் அத்தோடு இணைத்து கொடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், மிரட்டல் வந்த போன் எண்ணை வைத்து, அது பெங்களூர் எச்எஸ்ஆர் லே-அவுட்டை சேர்ந்த சாஜு ஜோஸ் என்பவர் பெயரில் வாங்கப்பட்ட சிம்கார்டுடையது என்பதை காவல்துறை கண்டுபிடித்து அவரை சுற்றி வளைத்தது.
காரில் போன்
ஆனால், அவரோ, தனக்கும் மிரட்டலுக்கும் தொடர்பில்லை என்றார். இதையடுத்து விசாரணைக்கு காவல் நிலையம் அழைத்துச் சென்றனர் போலீசார். அப்போது, சாஜு ஜோசின் பிளாட்டில் வசிக்கும் கோகுல் காரை ஓட்டி வந்துள்ளார். அந்த சிம்கார்டு அதே காருக்குள் இருப்பதை டிரேஸ் செய்த போலீசார் காரின் தரை விரிப்புக்கு கீழே கிடந்த போனை எடுத்து பார்த்தபோது சிம் உள்ளே இருந்தது தெரியவந்தது.
காட்டிக்கொடுத்த கடைக்காரர்
இதையடுத்து, கோகுல் மீது சந்தேகம் எழுந்தது. போனை வாங்கிய கடைக்கு கோகுலை அழைத்துச் சென்றபோது, கடை உரிமையாளரும், அவர்தான் போனை வாங்கியதாக கூறினார். மேலும், வாட்ஸ்சப்பில் இருந்து சென்ற மிரட்டல்கள் அனைத்தும், கோகுல் வீட்டு வைபை இணையத்தை பயன்படுத்தி சென்றுள்ளன. ஆனால், செல்போன் நெட்வொர்க்கை வைத்து போலீசார் டிரேஸ் செய்வார்கள் என்று நினைத்த கோகுல், வைபையை வைத்து இருப்பிடத்தை கண்டுபிடிக்க முடியும் என்று யோசிக்காமல் விட்டிருந்தாராம்.
சதி திட்டம்
தொழிலதிபருக்கு கோகுல் அனுப்பிய மெசேஜில், சாஜு ஜோஸ் வங்கி கணக்கு எண்ணைத்தான் குறிப்பிட்டிருந்துள்ளார். போன், சிம் போன்றவற்றையும், சாஜு ஜோஸ் பெயரிலான ஆவணங்களை கொடுத்து, அவர் பெயரில்தான் வாங்கியுள்ளார். இப்படியெல்லாம் ஆதாரங்களை ஜோடித்து சாஜு ஜோசை தீவிரவாதியாக காண்பித்து சிறை அனுப்புவதே கோகுலின் திட்டமாக இருந்துள்ளது.
தோழியை அடைய
இதன் மூலம் ஜோசின் மனைவியான தனது முன்னாள் காதலி கரோலினை (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) திருமணம் செய்யலாம் என்பது கோகுலின் விருப்பம். ஆனால் போலீசில் சிக்கிக்கொண்டார்.