முன்னாள் ராணுவ தளபதி வி.கே.சிங்குக்கு காஷ்மீர் சட்டசபை சம்மன்
ஸ்ரீநகர்: முன்னாள் ராணுவ தலைமை தளபதி வி.கே.சிங்குக்கு ஜம்மு காஷ்மீர் மாநில சட்டசபை சம்மன் அனுப்ப முடிவு செய்துள்ளது.
ராணுவத்தின் ரகசிய நிதியில் இருந்து தனி உளவுப் பிரிவை உருவாக்கி தொலைபேசிகளை ஒட்டுக் கேட்டார், ஜம்மு காஷ்மீர் மாநில அமைச்சருக்கு பணம் கொடுத்து மாநில அரசை கவிழ்க்கச் செய்தார் என்று பகீர் புகார்கள் வி.கே.சிங் மீது எழுந்தன.
இதைத் தொடர்ந்து இந்த புகார்கள் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தக் கூடும் என்றும் தகவல்கள் வெளியாகின. அப்போது விளக்கம் அளித்திருந்த வி.கே.சிங், ஜம்மு காஷ்மீர் மாநில அமைச்சர்களுக்கு ராணுவ ரகசிய நிதி கொடுக்கப்படுவது வழக்கமான ஒன்றுதான்...1947ஆம் ஆண்டு முதல் இப்படி கொடுக்கப்படுகிறது என்று கூறியிருந்தார்.
இதற்கு ஜம்மு காஷ்மீரில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த விவகாரம் இன்று அம்மாநில சட்டசபையிலும் எதிரொலித்தது.
சட்டசபைக்கு நேரில் வந்து வி.கே.சிங் உரிய விளக்கம் அளிக்கக் கோரி சம்மன் அனுப்ப வேண்டும் என்று எதிர்க்கட்சியான மக்கள் ஜனநாயகக் கட்சி எம்.எல்.ஏக்கள் குரல் எழுப்பினர். அப்போது ஆளும் தேசிய மாநாட்டுக் கட்சியினரும் எதிர்முழக்கமிட்டதால் சட்டசபையில் அமளி நிலவியது.
இதைத் தொடர்ந்து சட்ட அமைச்சர் சைபுல்லா எழுந்து, வி.கே.சிங்குக்கு சம்மன் அனுப்ப வேண்டும் என்று சபாநாயகரைக் கேட்டுக் கொண்டார். இதற்கு பதிலளித்த சபாநாயகர் முபாரக் குல், இது தொடர்பாக வி.கே.சிங்குக்கு கடிதம் எழுதுகிறேன். அவர் சட்டசபையில் ஆஜராகி விளக்கம் அளீக்க 1 மாத அவகாசம் வழங்கப்படும். தேவைப்பட்டால் வி.கே.சிங் ஆஜராவதற்காக சிறப்பு சட்டசபை கூட்டப்படும் என்றும் கூறினார்.