போர்ப்ஸின் கோடீஸ்வரர்கள் பட்டியலில் பேடிஎம் நிறுவனர் விஜய் சேகர் ஷர்மா... பணமதிப்பிழப்பின் பயனாளி!
Recommended Video
டெல்லி : பேடிஎம் நிறுவனர் விஜய் சேகர் ஷர்மா இந்தியாவின் இளம் கோடீஸ்வரர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளார். வயதான கோடீஸ்வரராக 92 வயது சம்பிரதா சிங் இடம்பிடித்துள்ளார்.
இந்தியாவின் இளம் கோடீஸ்வரர்கள் அதாவது 40 வயதுக்கு கீழ் உள்ள ஒரே இந்திய கோடீஸ்வரரர் என்ற சிறப்புடன் போர்ப்ஸ் பட்டியலில் இடம்பெற்றுள்ளார் பேடிஎம் நிறுவனர் விஜய் சேகர் ஷர்மா. 39 வயது ஷர்மா பட்டியலில் 1,394வது இடத்தில் உள்ளார். இவரது சொத்து மதிப்பு 1.7 பில்லியன் டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளது.
விஜய் சேகர் ஷர்மா 2011ல் பேடிஎம் மொபைல் வேலெட்டை கண்டுபிடித்தார். பேடிஎம் மால், ஈகாமெர்ஸ் வர்த்தகம், பேடிஎம் பேமெண்ட் பேங்குகள் உள்ளிட்ட டிஜிட்டல் முறையிலான பணப்பரிவர்த்தனைகளை ஷர்மா சந்தையில் அறிமுகம் செய்தார்.
பணமதிப்பிழப்பால் பலன் பெற்ற பேடிஎம்
பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் பலனடைந்த மிகப்பெரிய பயனாளி என்றால் அது பேடிஎம் தான். ரூபாய் நோட்டுகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்ட போது மளிகைக்கடை, காய்கறிக் கடை, ஆட்டோரிக்ஷா என்று பலர் மத்தியில் பேடிஎம் பயன்பாடு அதிகரித்தது.
பேடிஎம் பயனாளர்கள்
பேடிஎம் தற்போது 250 மில்லியன் பதிவு செய்யப்பட்ட பயனாளர்களையும், தினசரி 7 மில்லியன் பரிவர்த்தனைகளையும் செய்கிறது. விஜய் சேகர் ஷர்மா பேடிஎம்மின் 16 சதவீத பங்குகளை வைத்துள்ளார். இதன் மதிப்பு 9.4 பில்லியன் டாலர் என்று போர்ப்ஸ் கூறுகிறது.
உலகம் முழுவதும் 63 கோடீஸ்வர்கள்
போர்ப்ஸின் உலக பணக்காரர்கள் பட்டியலில் 2,208 பேர் இடம்பெற்றுள்ளனர். இவர்களில் 63 பேர் மட்டுமே 40 வயதிற்கு கீழ் உள்ளவர்கள், அவர்களிலும் 34 பேர் சுய தொழில் புரியும் தொழில்முனைவோர்கள். உலகம் முழுவதும் உள்ள 63 கோடீஸ்வரர்களின் மொத்த சொத்து மதிப்பு 265 பில்லியன் டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் கோடீஸ்வரர்களின் மதிப்பு 208 பில்லியன் டாலராக இருந்தது.
வயதான கோடீஸ்வரர் சம்ப்ரதா சிங்
இதே போன்று அல்கெம் லேபாரடரிஸின் தலைவர் 92 வயது சம்ப்ரதா சிங் வயதான இந்திய கோடீஸ்வரராக பட்டியலில் இடம்பெற்றுள்ளார். சம்ப்ரதா போர்ப்ஸ் பட்டியலில் 1,867வதாக இடம்பெற்றுள்ளார். சம்ப்ரதா சிங் 45 ஆண்டுகளுக்கு முன்னர் அல்கெம் லேபாரடிரீஸை தொடங்கினார்.