ஜம்மு காஷ்மீரின் முதல் பெண் முதல்வரானார் மெகபூபா முப்தி! பிடிபி, பாஜகவினர் அமைச்சர்களாக பதவியேற்பு!
ஜம்மு: ஜம்மு காஷ்மீரின் முதல் பெண் முதல்வராக மெகபூபா முப்தி இன்று பதவியேற்றார். அவருடன் மக்கள் ஜனநாயகக் கட்சி (பிடிபி) மற்றும் பாஜகவினர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.
ஜம்மு காஷ்மீரில் பாஜக - மக்கள் ஜனநாயகக் கட்சி (பிடிபி) கூட்டணி கடந்த ஆண்டு மார்ச் 1-ந் தேதி பொறுப்பேற்றது. இதில் மக்கள் ஜனநாயகக் கட்சியின் முப்தி முகமது சையது முதல்வராகவும், பாஜகவின் நிர்மல் சிங் துணை முதல்வராகவும் பதவியேற்றனர். இதனிடையே முப்தி முகமது சையது உடல்நலக் குறைவு காரணமாக கடந்த ஜனவரி 7-ந் தேதி காலமானார்.
இதைத் தொடர்ந்து புதிய அரசு பதவியேற்பதில் தாமதம் ஏற்பட்டதால் அங்கு ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இந்த சூழலில் பிரதமர் நரேந்திர மோடியுடன், முப்தியின் மகள் மெகபூபா நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து மீண்டும் மக்கள் ஜனநாயகக் கட்சி- பாஜக கூட்டணி அரசு அமைக்க முடிவு எடுக்கப்பட்டது.
இதன்படி ஜம்முவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அம்மாநிலத்தின் முதல் பெண் முதல்வராக மெகபூபா முப்தி இன்று பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் வோரா பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
அஸ்ஸாமின் சைதா அன்வாரா தைமூருக்கு அடுத்தபடியாக முதல்வராக பதவியேற்கும் நாட்டின் 2-வது முஸ்லிம் பெண் என்ற பெருமையும் மெகபூபாவுக்கு கிடைத்துள்ளது. மெகபூபாவுடன் மக்கள் ஜனநாயகக் கட்சி மற்றும் பாஜகவினர் அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர்.