பாகிஸ்தான் தொடர்பாக என் தந்தை பேசியதில் தவறில்லை.. முப்தி மகள் மெஹபூபா
ஜம்மு: பாகிஸ்தான் தொடர்பாக எனது தந்தை பேசியதில் எந்தத் தவறும் இல்லை. அவர் அடிப்படையில் அமைதி விரும்பி, போர் வெறியர் அல்ல என்று ஜம்மு காஷ்மீர் முதல்வர் முப்தி முகம்மது சயீத்தின் மகளும், மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவருமான மெஹபூபா கூறியுள்ளார்.
பாகிஸ்தான் தொடர்பாகவும், காஷ்மீர் பிரிவினைவாதிகள் குறித்தும் முப்தி தெரிவித்த கருத்துக்கள் சர்ச்சையைக் கிளப்பியுள்ளன. இந்த விவகாரம் இன்று நாடாளுமன்றத்தில் பெரும் அமளியைக் கிளப்பின.
முப்தி பேச்சு குறித்து பிரதமர் மோடி விளக்கம் தெரிவிக்க வேண்டும் என்று காங்கிரஸ், சமாஜ்வாடி உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்கள் வலியுறுத்தினர். அதுவரை சபையை நடத்த விட மாட்டோம் என்றும் அவர்கள் போராட்டத்தில் குதித்தனர்.
இந்த நிலையில், முப்தி பேச்சுக்கு அவரது மகள் மெஹபூபா விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில், எனது தந்தை அடிப்படையில் அமைதியை விருப்புபவர். ஜனநாயக முறையில் நம்பிக்கை கொண்டவர்.
கடந்த லோக்சபா தேர்தலை விட இந்த சட்டசபைத் தேர்தலின்போது வன்முறை குறைந்திருந்தது. வன்முறை குறையும்போது, பேச்சுவார்த்தையில், தீர்வு காண்பதில் அனைவரையும் உள்ளடக்குவதில் தவறில்லையே.
அமைதிப் பேச்சுவார்த்தையின்போது பாகிஸ்தான் என்ன சொல்ல விரும்புகிறது, ஹூரியத் என்ன சொல்ல விரும்புகிறது என்பதையும் அறிந்து கொள்வதில் தவறில்லையே.
பிரிவினைவாதிகளும், தீவிரவாதிகளும் ஆயுதத்தைப் போட்டு விட்டு வன்முறையை விட்டு விட்டு அமைதிப் பாதைக்குத் திரும்பினால் அவர்களை ஆதரிப்பதும், ஊக்குவிப்பதும் அவசியமாகும்.
கடந்த தேர்தல்களின்போதும் கூடத்தான் ஆயுதப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். ஆனால் இப்போது உள்ளது போல அப்போது இல்லை. அப்போது அதிக அளவிலான வன்முறைகள் நடந்ததை அனைவரும் பார்த்தோம்.
எனது தந்தை போர் வெறியர் அல்ல, போரை நேசிப்பவர் அல்ல. பாகிஸ்தான் மீது குண்டு போடு என்று அவர் சொல்வார் என்று யாரும் எதிர்பார்க்க வேண்டாம்.
இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை பாஜக தரப்பிலிருந்து யாரும் எங்களிடம் பேசவில்லை.
ஜம்மு காஷ்மீரில் அமைதி நிலவ பாகிஸ்தானையும் பேச்சுவார்த்தையில் சேர்க்க வேண்டும் என்றுதான் எனது தந்தை சொன்னார். அதை டெல்லியில் உள்ள மீடியாக்கள் தவறாக புரிந்து கொண்டு மிகைப்படுத்தியுள்ளன. காரணம் அவர்களுக்கு காஷ்மீர் குறித்து புரியாது என்று கூறியுள்ளார் மெஹபூபா.