பாஜகவுக்கு ஒரு நீதி.. எனக்கு ஒரு நீதியா.. மீண்டும் வீட்டுக் காவலில் மெஹபூபா முப்தி!
ஜம்மு: ஜம்மு-காஷ்மீர் மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவரும், அந்த மாநிலத்தின் முன்னாள் முதல்வருமான மெஹபூபா முப்தி தன்னை மீண்டும் வீட்டுக் காவலில் வைத்துள்ளதாக கூறியுள்ளார்.
14 மாதங்களுக்கு பிறகு தடுப்புக் காவலில் இருந்து வெளியே வந்த அவர் இவ்வாறு குற்றம்சாட்டியுள்ளார்.
பாஜக அமைச்சர்களுக்கு ஒரு நீதி, எனக்கு ஒரு நீதியா என அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.
சிறப்பு அந்தஸ்து ரத்து
மத்திய அரசு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜம்மு காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது பிரிவு ரத்து செய்தது. அந்த மாநிலம் ஜம்மு காஷ்மீர், லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டது. இதற்கு முன்னதாக மெஹபூபா முப்தி, தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா, அவரது மகனும் மாநில முன்னாள் முதல்வருமான உமர் அப்துல்லா வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர்.
விடுவிப்பு
அங்குள்ள பிரிவினைவாத தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டனர். ஒரு ஆண்டுகள் கழித்து பின்னர் வீட்டுக் காவலில் இருந்தவர்கள் விடுவிக்கப்பட்டனர். மெஹபூபா முப்தி சுமார் 14 மாதங்களுக்குப் பிறகு, கடந்த அக்டோபர் மாதம் தடுப்புக் காவலில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
அதிகாரிகள் மறுப்பு
இந்த நிலையில் தன்னை மீண்டும் தடுப்புக் காவலில் வைத்துள்ளதாக மெஹபூபா முப்தி குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து டுவிட்டரில் பதிவிட்ட அவர், அவர், என்னை மீண்டும் சட்டவிரோதமான முறையில் தடுப்புக் காவலில் வைத்துள்ளனர். புல்வாமாவில் உள்ள வஹீத் பாராவின் வீட்டுக்குச் செல்ல அதிகாரிகள் எனக்கு இரண்டு நாட்களாக அனுமதி மறுக்கின்றனர்.
நியாயம் இல்லை
பாஜக அமைச்சர்களும் அவர்களின் ஆதரவாளர்கள் காஷ்மீரின் அனைத்து பகுதிகளுக்கும் செல்கின்றனர். ஆனால், எனக்கு மட்டும் பாதுகாப்பு ஒரு பிரச்சினையாக உள்ளது'' என்று மெஹபூபா முப்தி கூறி உள்ளார். தனது வீட்டின் முன்பு பாதுகாப்பு வாகனம் நிற்கும் புகைப்படத்தையும் அவர் அந்த பதிவில் இணைத்துள்ளார்.