ஜம்மு காஷ்மீரில் பா.ஜ.க ஆதரவுடன் ஆட்சி அமைக்க மக்கள் ஜனநாயகக் கட்சி எம்.எல்.ஏக்கள் கடும் எதிர்ப்பு
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பாரதிய ஜனதா கட்சி ஆதரவுடன் ஆட்சி அமைப்பதற்கு மக்கள் ஜனநாயகக் கட்சி (பி.டி.பி.) எம்.எல்.ஏக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
87 இடங்களைக் கொண்ட ஜம்மு காஷ்மீர் சட்டசபைக்கான தேர்தலில் பி.டி.பி. 28 இடங்களைக் கைப்பற்றியது. பாரதிய ஜனதா கட்சி 25 இடங்களையும் தேசிய மாநாட்டுக் கட்சி 15, காங்கிரஸ் 12 இடங்களைக் கைப்பற்றியது.
ஆட்சி அமைக்க தேவையான 44 இடங்கள் எந்தக் கட்சிக்கும் கிடைக்காத நிலையில் யார் ஆட்சி அமைப்பது என்பதில் தொடர்ந்து குழப்பம் நீடித்து வருகிறது. பி.டி.பி.க்கு தேசிய மாநாட்டு கட்சி, காங்கிரஸ் ஆகியவை ஆதரவு தர முன்வந்துள்ளன.
இருப்பினும் பி.டி.பி. மேலிடம், பாரதிய ஜனதாவுடன் ஆட்சி அமைக்க முயற்சித்து வருகிறது. ஆயுதப் படையினருக்கு அதிகாரம் வழங்கும் சட்டத்தை நீக்குதல், 370வது பிரிவை தொடரச் செய்தல் உள்ளிட்ட விவகாரங்களில் பி.டி.பி.- பா.ஜ.க. இடையே ஒருமித்த கருத்து ஏற்பட்டால் இரு கட்சிகளும் இணைந்து ஆட்சி அமைக்கும் என்று கூறப்பட்டது.
மேலும் பி.டி.பி.க்கு முதல்வர் பதவியும் பா.ஜ.க.வுக்கு துணை முதல்வர் பதவியும் வழங்கப்படலாம் என்றும் செய்திகள் தெரிவித்தன. இந்த நிலையில் பி.டி.பி. கட்சி தமது எம்.எல்.ஏக்களுடன் நேற்று முதல் ஆலோசனை நடத்தி வருகிறது. இந்த ஆலோசனையில் பா.ஜ.க.வுடன் இணைந்து ஆட்சி அமைப்பதை பெரும்பாலான எம்.எல்.ஏக்கள் கடுமையாக எதிர்ப்பதாக ஜம்மு காஷ்மீரில் இருந்து ஒன் இந்தியா செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரில் எந்த வகையிலும் பா.ஜ.க. ஆட்சியில் அமர்ந்துவிடக் கூடாது என்பதுதான் பி.டி.பி. எம்.எல்.ஏக்களின் கருத்தாக இருக்கிறது. மேலும் பா.ஜ.க. ஆட்சி அமைப்பதைத் தடுக்க பி.டி.பி.க்கு ஆதரவு அளிக்க 5 சுயேட்சைகள் தயராக இருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இதனால் ஜம்மு காஷ்மீரில் யார் ஆட்சி அமைப்பது என்பதில் இழுபறியும் குழப்பமும் தொடருகிறது.