அருணாச்சலப்பிரதேச முதல்வராக பதவியேற்றார் பேமா கண்டு
இடா: அருணாச்சலப்பிரதேசத்தின் புதிய முதல்வராக பேமா கண்டு பதவியேற்றுள்ளார். இடா நகரில் நடைபெற்ற விழாவில் அம்மாநில ஆளுநர் அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
அருணாச்சலப் பிரதேச அரசியலில் சமீபகாலமாக அடுத்தடுத்து திடீர் திருப்பங்கள் ஏற்பட்டு வருகின்றனர்.
அதன்படி, பாஜக ஆதரவுடன் கலிகோ புல் தலைமையில் அருணாச்சலப் பிரதேசத்தில் காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் அமைத்த அரசு செல்லாது என சில தினங்களுக்கு முன் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து, 2015 டிசம்பர் 15ஆம் தேதிக்கு முன்னர் முதலமைச்சராக இருந்த நபாம் துகியின் ஆட்சி மீண்டும் அமைந்தது.
எனவே, சட்டசபையில் மெஜாரிட்டியை நிரூபிக்க நபாம் துகிக்கு ஆளுநர் கெடு விதித்திருந்தார். அதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இடா நகரில் நடந்தது. இதில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களும் கலந்துகொண்டனர்.
அப்போது, யாரும் எதிர்பார்க்காத அதிரடி திருப்பமாக அதிருப்தி எம்.எல்.ஏ.வான பேமா கண்டுவை சட்டசபை காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்க முடிவெடுக்கப்பட்டது. இதையடுத்து, ஆளுநரை சந்தித்த முதலமைசர் நபாம் துகி, தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார்.
அதனைத் தொடர்ந்து, பேமா கண்டு(37) முதல்வர் பதவிக்கு முன்னிறுத்தப்பட்டார். 47 எம்எல்ஏக்களின் ஆதரவுடன் ஆட்சி அமைக்க அவர் உரிமை கோரினார்.
அதன் தொடர்ச்சியா இடா நகரில் இன்று நடைபெற்ற பதவியேற்பு விழாவில் பேமா கண்டு அருணாச்சலப் பிரதேச முதல்வராக பதவியேற்றுள்ளார். அம்மாநில ஆளுநர் அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
பேமா கண்டுதான், 2015ஆம் ஆண்டு நபாம் துகி ஆட்சி கவிழ முக்கிய காரணமாக இருந்தவர். இவர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முன்னாள் முதல்வர் டோர்ஜி கண்டுவின் மகன் ஆவார்.