மத்திய அரசு ஆபீஸ் வளாகத்தில் புளிச்சுன்னு துப்பிராதீங்க.. ஃபைன் போட்டுருவாங்க!
டெல்லி: மத்திய அரசு அலுவலக வளாகங்களில் பொது சுகாதாரத்துக்கு கேடு விளைவிக்கும் வகையில் சிறுநீர் கழிப்பது, எச்சில் துப்புவது போன்ற செயல்களில் ஈடுபடுவோருக்கு இனி அபராதம் விதிக்கப்படும் என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது.
மத்திய அரசின் முக்கிய திட்டங்களில் ஒன்றான "தூய்மை இந்தியா' திட்டத்தை நகர்ப் புறங்கள், கிராமப் புறங்கள் என அனைத்து பகுதிகளிலும் கொண்டு செல்ல மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில் தூய்மை இந்தியா திட்டத்தின் செயல்பாட்டை மேம்படுத்த வேண்டும் என்பதற்காக புதிய வழிகாட்டி நெறிமுறைகளை மத்திய அரசு சமீபத்தில் வெளியிட்டது
இது குறித்து மத்திய அரசு அனைத்து அமைச்சகங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பியுள்ளது. அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,
அந்தந்த துறையின் பொறுப்பு
மத்திய அரசு அலுவலகங்களின் வளாகத்துக்கு உட்பட்ட பகுதி மற்றும் வெளிப்பகுதியில் உள்ள குப்பைகள், கழிவுகள் உள்ளிட்டவற்றை உடனடியாக அகற்றுவது மற்றும் ஆரோக்கியமான பணிசூழலை உறுதி படுத்துவது அந்தந்த துறையின் பொறுப்பாகும்.
2 மாதத்திற்கு ஒருமுறை துப்புரவு
அலுவலகங்களில் பயன்படுத்தாத நிலையில் கிடக்கும் ஹார்டுவேர், மரச்சாமான்கள் போன்றவற்றை குறைந்தது 2 மாதத்துக்கு ஒருமுறை அப்புறப்படுத்தும் வகையில், அனைத்து மத்திய அரசு அலுவலகங்களிலும் துப்புரவுப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இதில் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளும், அலுவலர்களும் பங்கேற்க வேண்டும்.
பதிவேடு பராமரிப்பு
அலுவலகங்களில் உள்ள பல்வேறு பதிவேடுகள் 6 மாதத்துக்கு ஒருமுறையாவது சரிபார்க்கப்பட வேண்டும். நெறமுறைகளின்படி அவற்றை ஆண்டுக்கு ஒருமுறையாவது அப்புறப்படுத்துவதும் அவசியமாகும்.
அபராதம்
அலுவலக வளாகங்களின் தூய்மைப் பராமரிப்பு தொடர்பான கண்காணிப்புப் பணியை மேற்கொள்ள, ஒவ்வொரு துறையின் இணைச் செயலர் தலைமையில் குழு அமைக்கப்பட வேண்டும். குறிப்பாக, மத்திய அரசு அலுவலக வளாகங்களில் பொதுசுகாதரத்திற்கு கேடு விளைவிக்கும் வகையில் சிறுநீர் கழிப்பது, எச்சில் துப்புவது போன்ற செயல்களில் ஈடுபடுவோருக்கு இனி அபராதம் விதிக்கப்படும்.
ஒப்பந்ததாரருக்கும் அபராதம்
அரசு அலுவலகங்களில் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படும்போது ஏற்படும் கட்டட கழிவுகள் குறித்த நேரத்தில் அகற்றப்பட வேண்டும். இல்லாவிட்டால் சம்பந்தப்பட்ட கட்டுமான ஒப்பந்ததாரருக்கும் இனி அபராதம் விதிக்கப்படும்.
திடீர் ஆய்வு அவசியம்
மத்திய அரசு அலுவலக வளாகங்களில் தூய்மைப் பராமரிப்பு தொடர்பாக திடீர் ஆய்வுகளை மேற்கொள்வது அவசியம். இது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களுக்கு அபராதம் விதிப்பதும் அந்தந்த துறை நிர்வாகத்தின் கடமையாகும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.