6 சொகுசு பங்களா, ரூ. 3 கோடி சொத்து... ம.பி.யில் மீண்டும் ஒரு கோடீஸ்வர பியூன் சிக்கினார்!
போபால்: மத்தியப்பிரதேசத்தில் வங்கி ஒன்றில் பியூனாக பணி புரிந்து வரும் ஊழியர் ஒருவரின் வீட்டில் இருந்து ரூ. 3 கோடி மதிப்பிலான சொத்துக்களை லோக் ஆயுத்கா போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
மத்தியப்பிரதேச மாநிலம் குவாலியரில் உள்ள வங்கி ஒன்றில் கடந்த 1983ம் ஆண்டு தனது 40 வயதில் பியூனாக சேர்ந்துள்ளார் குல்தீப் சிங் யாதவ். கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் எந்தவிதமான பதவியுயர்வும் இல்லாமல் தனது பியூன் வேலையிலேயே இருந்துள்ளார் குல்தீப்.
இந்நிலையில், சமீபத்தில் குல்தீப் மீது லோக் ஆயுக்தா போலீசாருக்கு புகார் ஒன்று வந்தது. அதனடிப்படையில் புர்ஷோதம் பகுதியில் உள்ள குல்தீப்பின் மூன்று மாடி வீட்டில் சோதனை செய்யச் சென்றனர் லோக் ஆயுக்தா போலீசார்.
அங்கு குல்தீப்பின் சொத்து விபரங்களைக் கேட்டு போலீசார் அதிர்ச்சி அடைந்து விட்டனர். ஏனேனில் குல்தீப் சிங்கிற்கு இது போன்ற பங்களாக்கள் மொத்தம் 6 உள்ளதாம். இதையும் சேர்த்து அவரது மொத்த சொத்து மதிப்பு ரூ. 3 கோடியைத் தாண்டும் என போலீசார் கூறுகின்றனர்.
ரூ.5 ஆயிரம் சம்பளத்தில் தனது பியூன் பணியைத் தொடங்கிய குல்தீப், தனது சம்பளப் பணத்தைச் சேமித்திருந்தால் கூட ரூ. 16 லட்சத்தை தாண்டியிருக்க முடியாது எனத் தெரிவித்துள்ளனர் போலீசார்.
முக்கிய ஆவணங்களில் உரிய அதிகாரிகளிடம் கையெழுத்து பெறுவதற்கு பெற்ற லஞ்சப் பணத்தின் வாயிலாகவே குல்தீப் இவ்வளவு சொத்து சேமித்திருக்க வேண்டும் எனக் கூறப்படுகிறது.
கடந்த மூன்றாண்டுகளுக்கு முன்னர், மத்தியப்பிரதேசத்தில் இதே போன்று லஞ்சப்பணத்தின் மூலம் கோடீஸ்வரரான பியூன் நரேந்திர தேஷ்முக் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.