72 வயது தாத்தாவின் மரணம்.. காரணம் சில குரங்குகள்.. வழக்கு போட கோரும் குடும்பத்தினர்!
குரங்குகள் மீது வழக்கு பதிய கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பாக்தத்: சிலரின் அறியாமையை நினைத்து சிரிப்பதா? அழுவதா என்றே தெரியவில்லை.
உத்திரபிரதேச மாநிலத்தில் பாக்பத் என்ற பகுதி உள்ளது. இங்கு வசித்து வருபவர் தரம்பால் சிங். இவருக்கு வயது 72 ஆகிறது. இவர் தன் பக்கம் உள்ள ஒரு காட்டு பகுதியில் விறகு, சுள்ளிகளை பொறுக்கி கொண்டிருந்தார்.
தரம்பால்
அப்போது அங்கிருந்த ஒரு பாழடைந்த கட்டிடத்தில் குரங்கு கூட்டம் ஒன்று இருந்தது. தரம்பால் விறகு பொறுக்குவதை கண்ட அந்த குரங்குகள், அங்கிருந்த செங்கல் மற்றும் கற்களை கொண்டு தரம்பாலை தாக்க தொடங்கின. இதனால் தரம்பால் படுகாயமடைந்து விழுந்தார். இதை கண்ட அங்கிருந்தோர் உடனடியாக தரம்பாலை தூக்கி கொண்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
வழக்கு பதிய வேண்டும்
ஆனால் தரம்பால் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதனால் தரம்பால் குடும்பத்தினர் மிகுந்த அதிர்ச்சியும் மனவேதனையும் அடைந்தனர். எனவே நேராக போலீசாரிடம் சென்ற அவர்கள், தரம்பாலின் உயிரிழப்புக்கு காரணமான குரங்குகள் மீது வழக்கு பதிய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
கெஞ்சிய குடும்பத்தார்
இதனை கேட்டு அரண்டுபோன போலீசார், குரங்கு மீது எல்லாம் வழக்கு போட முடியாது, குரங்கு என்றில்லை எந்த விலங்குகள் மீதும் வழக்கு போட முடியாது என்றனர். ஆனால் குடும்பத்தாரோ, அழுதுகொண்டே எப்ஐஆர் போடுங்கள் என்று கெஞ்சி கேட்டு கொண்டே இருந்தனர்.
மேலதிகாரிகளுக்கு கடிதம்
தொடர்ந்து போலீசார் மறுக்கவும், சம்பந்தப்பட்ட குரங்குகள் மீது எஃப்.ஐ.ஆர் போட்டே ஆக வேண்டும் என்று மேல் அதிகாரிகளுக்கு கடிதம் எழுத போவதாக குடும்பத்தினர் தெரிவித்துவிட்டு வந்துள்ளனர்.