பலத்த சத்தத்தை தொடர்ந்து ஆடிய, மேஜை, நாற்காலிகள்.. பெங்களூரில் நிலநடுக்கமா? மக்கள் பீதி
பெங்களூர்: பெங்களூரில் அதுவும் குறிப்பாக தெற்கு பெங்களூர் பகுதிகளில் நில நடுக்கம் ஏற்பட்டதை போன்ற அறிகுறிகளை உணர்ந்ததாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
பெங்களூரின் ராஜராஜேஸ்வரி நகர், பிடிஎம் லேஅவுட், குமாரசாமி லேஅவுட், விஜயநகர், கோனனகுண்டே, கெங்கேரி, உத்தரஹள்ளி, பன்னேருகட்டா சாலை உள்ளிட்ட பல பகுதிகளில், இன்று மாலை மிகப்பெரிய வெடி சத்தம் கேட்டது. அப்போது சுமார் 20 வினாடிகள், வீட்டு ஜன்னல்கள் ஆடியதாகவும், மேஜை, நாற்காலிகள் நகர்ந்ததாகவும், பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால், நில நடுக்கம் பீதி மக்களை தொற்றிக்கொண்டது. சமூக வலைத்தளங்களில் மக்கள் தங்கள் பீதியை பதிவு செய்தனர். ஆனால், சுரங்கம் மற்றும் புவியியல் துறை நிபுணர் ஜெகதீஷ் இதை மறுத்துள்ளார்.
பெங்களூரில் நில நடுக்கம் ஏற்படவில்லை என்று கூறும் அவர், ரிக்டர் அளவுகோலில் அப்படி எதுவும் பதிவாகவில்லை என்கிறார். இதன்பிறகுதான் மக்களுக்கு நிம்மதி ஏற்பட்டது. காற்று வெடிப்பு என அழைக்கப்படும் சூழல் நிகழ்வால் இந்த சத்தம் ஏற்பட்டுள்ளதாக சில வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.