ஒரு அதிமுக எம்பி கூட ராஜினாமா செய்ய மாட்டோம்.. தம்பிதுரை உறுதிபட பேச்சு!
மக்கள் போராடுவதற்காகத்தான் எங்களை டெல்லி அனுப்பி இருக்கிறார்கள் என்று தம்பிதுரை குறிப்பிட்டுள்ளார்.
Recommended Video
டெல்லி: காவிரியில் இருந்து தமிழகத்திற்கு வர வேண்டிய நீர் நிச்சயம் கிடைக்கும் அதை உச்சநீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது என்றும், காவிரி விவகாரத்தில் அதிமுக எம்பிக்கள் ராஜினாமா செய்யமாட்டோம் என்று மக்களவைத் துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழகத்தில் அனைத்து அரசியல் கட்சியினர், விவசாய சங்கத்தினர், மாணவர் இயக்கங்கள் எனப் பலரும் தொடர்ந்து போராடி வருகிறார்கள்.
இந்நிலையில் இன்று மக்களவைத் துணைசபாநாயகரும், அதிமுக மூத்த தலைவருமான தம்பிதுரை டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசுகையில், காவிரி வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மத்திய அரசு அவமதித்துவிட்டது.
காவிரி வழக்கின் தீர்ப்பில் 'திட்டம்' என்கிற சொல் எதுவாக இருந்தாலும் அது காவிரி மேலாண்மை வாரியத்தைத் தான் குறிக்கும். அதனால் நிச்சயம் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும்.
அதற்கான போராட்டங்களைத் தான் அதிமுக அரசும், அதிமுக எம்பிக்களும் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். தமிழக எதிர்கட்சிகள் சொல்வதைப் போல, ராஜினாமா செய்வதால் தமிழகத்திற்கு எந்தப் பயனும் கிடைத்துவிடாது.
இதுபோன்ற பிரச்னைகளில் இரண்டு இடங்களில் தான் போராட முடியும். அதற்கான இடங்கள் நாடாளுமன்றமும், உச்சநீதிமன்றமும் தான். சட்ட ரீதியாக உச்சநீதிமன்றத்திலும், அரசியல் ரீதியாக நாடாளுமன்றத்திலும் நாங்கள் போராடி வருகிறோம்.
மக்கள் எங்களைத் தேர்ந்தெடுத்து டெல்லிக்கு அனுப்பி வைத்தது உரிமைகளுக்காகப் போராடத்தானே தவிர, ராஜினாமா செய்வதற்கு அல்ல. எனவே, நாங்கள் தொடர்ந்து போராடுவோம் என்று தமிபிதுரை தெரிவித்துள்ளார்.
மேலும், முத்துக்கருப்பன் ராஜினாமா செய்வதாக எடுத்த முடிவு அவரது தனிப்பட்ட முடிவு என்றும், அதற்கும் தங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.