'அத்திப்பட்டி' போல மாயமாகும் ஆபத்து.. கர்நாடக மாநில கிராமத்தில் மக்கள் வெளியேற்றம்
குடகு மாவட்டம், காரிகேவில் நிலச்சரிவு ஏற்படும் ஆபத்து உள்ளதால் அங்கிருந்து 15 குடும்பங்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
Recommended Video
பெங்களூரு: கர்நாடகா மாநிலம் குடகு பகுதியில் எந்த நேரத்திலும் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளது என்று புவியியல் வல்லுநர்கள் எச்சரித்ததைத் தொடர்ந்து நிலச்சரிவு ஆபத்து உள்ள இடத்தில் இருந்த 15 குடும்பங்கள் பாதுகாப்பாக அகற்றப்பட்டுள்ளனர்.
கர்நாடகா மாநிலம், சூரத்கல்லில் உள்ள தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தின் புவியியல் துறை உதவி விரிவுரையாளர் அனன்யா வாசுதேவ், குடகு மாவட்டத்தில் உள்ள கார்கே கிராமத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் எந்த நேரமும் நிலச்சரிவு அபாயம் உள்ளதால் அங்குள்ள மக்களை அகற்ற வேண்டும் என்று எச்சரிக்கை தெரிவித்துள்ளார்.
கர்நாடகா மற்றும் கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்ததால், கேரளாவின் 15க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதந்தன. அதே போல, கர்நாடகாவில் குறிப்பாக குடகு மாவட்டம் பெரும் சேதத்துக்கு உள்ளானது. குடகு மாவட்டத்தில் நிலச்சரிவும் வெள்ளமும் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில்தான், குடகு மாவட்டத்தில் உள்ள காரிகே கிராமத்தில் வெள்ளப்பெருக்கு காரணமாக தரைக்கு கீழே மண் அரிப்பு ஏற்பட்டு குகைபோல வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாகவு இதனால் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் அப்பகுதியில் வசிக்கும் மக்களை பாதுகாப்பு கருதி அகற்ற வேண்டும் என்று கர்நாடகா என்ஐடி புவியியல் வல்லுநர் அனன்யா வாசுதேவ் தெரிவித்துள்ளார்.
மேலும், அவர் திருவனந்தபுரத்தில் நடந்த தேசிய புவி அறிவியல் மையத்தின் பயிலரங்கில் மண் குழாய் பற்றிய விவரங்களைக் கற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில், தேசிய பேரிடர் கண்காணிப்பு மையமு காரிகே பகுதியில் நிலச்சரிவு ஏற்படும் ஆபத்து உள்ளதை உறுதி செய்துள்ளது.
இதைத் தொடர்ந்து, காரிகே பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டு மொத்த இடமும் மாயமாகும் அபாயம் உள்ள பகுதியில் குடியிருந்த 15 குடும்பங்களை பாதுகாப்பு கருதி அகற்றப்பட்டு வேறு இடத்தில் குடியமர்த்தப்பட்டுள்ளனர்.