இறுதி சடங்கு செய்ய டேங்கர் லாரிகளில் தண்ணீர் வரவழைக்கும் மக்கள்.. மராத்வாடாவில் அவலம்
மராத்வாடா: மகாராஷ்டிர மாநிலத்தில் பருவமழை காலம் துவங்கி ஒன்றரை மாதங்களை கடந்தாலும், மராத்வாடா பகுதியில் இன்னும் போதிய மழை பெய்யவில்லை.
மராட்டிய மாநிலத்திலுள்ள மராத்வாடா பகுதியில் ஆண்டின் முக்கால் வாசிக்கும் மேற்பட்ட நாட்களில் கடும் வறட்சியே நிலவும். இதனால் விவசாயிகளின் தற்கொலை என்பதும் இப்பகுதியில் அடிக்கடி நிகழும் சம்பவமாக உள்ளது.
கடந்த சில மாதங்களாக கடுமையான வறட்சி அப்பகுதியை வாட்டி வதைத்தது. இதனால் அடிப்படை தேவைகளுக்கு கூட போதுமான நீரின்றி. வெப்ப நோய் மற்றும் மாசடைந்த நீரைக் குடித்ததால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர்.
மராட்டியத்தில் பருவமழை தொடங்கினாலும் இன்னும் அங்கு வறட்சி நிலை மாறவில்லை. தற்போது வரை மராத்வாடாவில் சுமார் 50 சதவீதம் மழை குறைவாக பெய்துள்ளது. அப்பகுதியில் இருக்கும் மிடில் கோதாவரி நதி பகுதியிலும் 34 சதவீத மழை குறைவாக பெய்துள்ளது.
லோயர் கோதாவரி நதி மற்றும் பிரன்ஹிதா நதி பகுதிகளிலும் எதிர்பார்த்ததை விட குறைவான மழையே பதிவாகியுள்ளது. இதனால் மராத்வாடாவில் உள்ள பீட் என்ற மாவட்டம் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இங்கு சுமார் 50 சதவீத மழை குறைவாக பெய்துள்ளது. இங்குள்ள கிராம மக்கள் யாரேனும் இறந்து விட்டால் இறுதி சடங்குகள் செய்வதற்காக, டேங்கர் லாரிகளில் தண்ணீர் வரவழைக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
பீட் பகுதி மக்கள் இறந்தவர்களின் உடலை தகனம் செய்த பின்னர், கோதாவரி நதியில் குளிக்கும் வழக்கமுடையவர்கள். ஆனால் கோதாவரி நதியில் தண்ணீர் இல்லாத காரணத்தால், அவர்கள் 92 கிமீ தொலைவில் பக்கத்து மாவட்டமான அவுரங்காபாத்தில் இருக்கும் பைதான் என்ற இடத்திற்கு சென்று இறுதி சடங்கை மேற்கொள்ளும் நிலையும் உள்ளது.
90 கிமீ பயணிப்பதை தவிர்க்க டேங்கர்களில் தண்ணீரை வரவழைக்கிறார்கள். இதுபற்றி கூறும் மராத்வாடா மக்கள் நாங்கள் வறட்சிக்கு மத்தியில் தான் பிறக்கிறோம். வறட்சியுடனே வாழ்நாள் முழுவதும் போராடுகிறோம்.
இறுதியில் இறந்தாலும் வறட்சி எங்களது மராத்வாடா மக்களை விடுவதில்லை என வேதனையுடன் கூறினர்.