சூடான பாத்திரத்தை தாங்கிப் பிடிக்கக் கூட நமக்கு சீனா தேவைப்படுகிறது.. தூக்கி எறிவார்களா மக்கள்?
இந்தியாவின் ஒவ்வொரு வீடுகளிலும் தங்கள் நாட்டு தயாரிப்பு மூலம் ஆக்கிரமித்துள்ள சீனாவை வீட்டை விட்டு மக்கள் விரட்டியடிப்பார்களா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.
டெல்லி: எல்லையை விட்டு சீன ராணுவத்தை விரட்ட இந்தியா போராடி வரும் நிலையில் நம் வீட்டை ஆக்கிரமித்திருக்கும் சீன பொருள்களையாவது நாம் விரட்டியடிப்போமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்தியா-பூடான்- திபெத் ஆகிய மூன்று நாடுகளின் சந்திப்பில் உள்ள டோக்லாம் பீடபூமியில் சாலை அமைக்கும் பணியை சீனா கடந்த 4 வாரங்களுக்கு முன்னர் தொடங்கியது. இந்த பகுதி பூடானுக்கு சொந்தமானது என்றாலும் அது நமது ராணுவத்தின் பாதுகாப்பில் உள்ளது.
இதனால் டோக்லாம் பகுதியில் சீனா சாலை போடும் பணியை இந்திய ராணுவத்தினர் தடுத்து நிறுத்தினர். பூடான் விஷயத்தில் இந்தியா தலையிட கூடாது என்று சீனா அடாவடித்தனம் செய்கிறது.
நெருப்பில்லாமல் புகையுமா?
டோக்லாம் பகுதியில் சீனா சாலை அமைத்தால் வடகிழக்கு மாநிலங்களையும் நாட்டையும் இணைக்கும் சிலிகுரி பிராந்தியத்துக்கு எப்போது வேண்டுமானாலும் பேராபத்து ஏற்படும். இதனால்தான் இந்திய ராணுவம் சீனாவுடன் மல்லுக் கட்டுகிறது.
சீனா ஏளனம்
இது சீனாவுக்கு எரிச்சலையூட்டுகிறது. மேலும் கடந்த 1962-ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தோ சீன போரில் இந்தியா சீனாவிடம் தோல்வி அடைந்தது. இந்த பழைய வரலாற்றை வைத்துக் கொண்டும் தங்களிடம் நவீன ராணுவ ஆயுதங்கள் உள்ளது என்று கூறி கொண்டு சீனா மிரட்டும் தொனியில் பேசி வருகிறது.
நம்மால் என்ன முடியும்
அத்துமீறி எல்லைக்குள் வந்த சீன ராணுவத்தை விரட்டியடிக்க இந்திய ராணுவம் ஒரு புறம் போராடி வருகிறது. அதே வேளையில் குறைந்தபட்சம் நம் வீடுகளுக்குள் ஊடுருவியுள்ள சீன பொருள்களை விரட்டியடிக்க நம்மால் இயன்ற அளவு என்ன செய்யலாம் என்ற கேள்வி எழுந்துள்ளது. பாகிஸ்தானோடு கைகோத்து கொண்டு இந்தியாவை அழிக்க நினைக்கும் சீனாவுக்கு நம் பணம் செல்வதா என்பதை சிந்திக்க வேண்டிய தருணம் இது.
வீட்டில் ஆக்கிரமிப்பு
குழந்தைகள் விளையாடும் பொம்மைகள், எழுது பொருள்களான பேனா, பென்சில், ரப்பர், ஸ்கேல், டிபன் பாக்ஸ், தண்ணீர் பாட்டில் உள்ளிட்ட பொருள்களை சீனா தயாரித்து அவற்றை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்கிறது. இதோடு அல்லாமல் நாம் பாரம்பரியமாக பயன்படுத்தும் விஷயங்களையும் நம்மை மறக்கடிக்க செய்கிறது சீனா. அதாவது டைனிங் டேபிளில் சூடான பொருள்களை வைக்கும் போது மரத்திலான பலகை கொண்டு அதன் மேல் வைப்போம்.
Recommended Video
நாளடைவில் மாற்றம்
இல்லாவிடில் துணியைக் கொண்டும், எவர்சில்வர் வளையம் கொண்டும் அதில்
சூடான பாத்திரங்களை வைக்க பழகினோம். ஆனால் தற்போது சீனா அதிலும் புகுந்துவிட்டது. சூட்டை தாங்கும் விரிப்புகள் போல் உள்ள இந்த விரிப்புகள் கலர் கலராக விதவிதமான டிசைன்களில் சென்னையில் பல்வேறு கடைகளில் விற்பனைக்கு வந்துள்ளன. இதனால் நாம் பாரம்பரியமாக பயன்படுத்தும் பொருள்களை மறந்து விட்டோம். சீன பொருள்களை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம்.
வர்த்தகத்தில் பலத்த அடி
சீனா பொருள்களை பயன்படுத்த வேண்டாம் என்று மும்பையில் உள்ள பள்ளி முதல்வர்கள் சங்கத்தினர் முடிவு செய்து அதை பெற்றோர்களுக்கும், குழந்தைகளுக்கும் அறிவுறுத்தவுள்ளனர். நாமும் இதுபோன்ற நம் வீடுகளில் ஆக்கிரமித்துள்ள சீன பொருள்களை இனியாவது வாங்காமல் புறக்கணிக்க முன் வர வேண்டும். எல்லையில் நின்று சீன ராணுவத்தினருடன் பொதுமக்களாகிய நம்மால் நேரடியாக போராட முடியாது என்றாலும் இதுபோல் அந்த நாட்டுக்கு சம்மட்டி அடி கொடுக்க தயாராக வேண்டும். இல்லாவிட்டால் நம்மை எதிர்க்கும் சீன நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி அடைய நாம் காரணமாகும் நிலை ஏற்படும்.