அடுத்த 48 மணி நேரத்தில் மிக கன மழை பெய்யும்.. மும்பைக்கு எச்சரிக்கை #MumbaiRains
மும்பையில் அடுத்த 48 மணி நேரத்தில் மிகவும் கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மும்பை: மும்பை மாநகரையே புரட்டி போட்ட மழையால் மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவசர நிலையை தவிர்த்து மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மும்பையில் கடந்த திங்கள்கிழமை முதல் கனமழை வானத்தை பிளந்து கொட்டுவது போல் கொட்டி வருகிறது. இதனால் ஆங்காங்கே தண்ணீர் தேங்கியுள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
மக்கள் அவசர நிலையை தவிர மற்ற காரணங்களுக்காக வெளியே வர வேண்டாம் என்று நகர நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் 48 மணி நேரங்களுக்கு கனமழை உள்ளதால் ஜாக்கிரதையாக இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ரயில் தண்டவாளங்கள்
ரயில் தண்டவாளங்கள் மழைநீரால் மூழ்கியுள்ளதால் பெரும்பாலான ரயில்கள் இயக்கம் நிறுத்தப்பட்டுள்ளது. மக்கள வெளியே விரும்பினால் இரவு நேரங்களில் ரயில்களை இயக்கும் என்று ரயில்வே துறை தெரிவித்துள்ளது. மும்பை விமான நிலையத்தை பொருத்தவரை 10 விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. மற்றவை தாமதமாகவும், வேறு விமான நிலையங்களுக்கும் மாற்றி விடப்பட்டுள்ளன.
போலீஸ் அறிவுரை
கார்களின் டயர்களுக்கு மேல் தண்ணீர் உள்ள இடங்களில் கார்களை இயக்க வேண்டாம் என்று போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர். அதேபோல் கடற்கரைக்கு சென்று பார்வையிடுவதையும் மக்கள் தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடற்கரை இணைப்பு மூடல்
மழைநீரை வெளியேற்ற வேண்டி பாந்த்ரா- வோர்லி கடற்கரை இணைப்பு சாலை மூடப்பட்டது . பின்னர் சில நேரங்கள் கழித்து திறந்துவிடப்பட்டு போக்குவரத்து அனுமதிக்கப்பட்டுள்ளது.
அலுவலகங்களில் மழைநீர்
மும்பையில் உள்ள கிங் எட்வார்ட் நினைவு மருத்துவமனை மற்றும் பல்வேறு அலுவலகங்களுக்குள் மழை நீர் புகுந்தது.மேலும் தாதர், பைகுல்லா , பரேல், வடாலா உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது.
மும்பை பங்குச்சந்தை
அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. எனினும் மும்பை பங்கு சந்தை இன்று இயங்கும் என்று அதன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பேரிடர் மீட்புக் குழு
தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் தயார் நிலையில் உள்ளனர். அதேபோல் வெள்ளத்தில் சிக்கும் மக்களை மீட்க கடற்படை சார்பில் டைவர்கள் தயார் நிலையில் உள்ளனர். கோலாபா, வோர்லி மற்றும் காட்கோபர் ஆகிய இடங்களில் தற்காலிக பாதுகாப்பு முகாம்களும் அமைக்கப்பட்டுள்ளன.
முதல்வருடன் பிரதமர்
மும்பையின் மழை நிலவரம் குறித்து முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸுடன் பிரதமர் நரேந்திர மோடியும், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் தொடர்பு கொண்டு பேசினர். மேலும் மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக உள்ளதாகவும் உறுதி அளித்தனர்.
அடுத்த 48 மணி நேரம்
மும்பை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்துக்கு கனமழை கொட்டும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தண்ணீர் தேங்கியுள்ள இடங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. மக்கள் தங்களுக்கு தேவையான உணவு பொருள்களை வாங்கி வைக்கவும், செல்போன்களை சார்ஜ் போட்டு வைத்துக் கொள்ளவும், போக்குவரத்தில் மாட்டிக் கொண்டால் வாகனங்களின் ஜன்னல் கண்ணாடியை மூடிக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.