இந்தியாவில் சில வருடங்களாகவே நிலைமை சரியில்லை.. இது பிரியங்கா சோப்ரா
மும்பை: இந்தியாவில் கருத்துகள் கூறுவதற்கு அஞ்சும் நிலைமை ஏற்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே நிலைமை சரியில்லை. கருத்துக்களைக் கூறுவோர் தாக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது என்று நடிகை பிரியங்கா சோப்ரா கூறியுள்ளார்.
கருத்துக்களைச் சொல்வதற்கு ஒவ்வொருவருக்கும் உரிமை உண்டு. ஆனால் அதற்கான வாய்ப்புகள், சுதந்திரம் இன்று கிடைப்பதில்லை என்று நான் கருதுகிறேன் என்றும் பிரியங்கா கூறியுள்ளார்.
ஷாருக் கான், அவரைத் தொடர்ந்து ஆமிர்கான் ஆகியோர் தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சை குறித்த கேள்விக்கு இவ்வாறு பதிலளித்தார் பிரியங்கா சோப்ரா. இதுதொடர்பாக அவர் அளித்த பேட்டியிலிருந்து...
ஷாருக் கான், ஆமிர் கானுக்கு மட்டுமல்ல, எல்லோருக்குமே கருத்துக்களைச் சொல்ல உரிமை உண்டு. உலகிலேயே மிகப் பெரிய ஜனநாயக நாடு இந்தியா. அதை நாம் மறந்து விடக் கூடாது.
கடந்த சில வருடங்களாக நிலைமை சரியில்லை. கருத்துக்களைக் கூறியதற்காக பலர் கடுமையாக கண்டிக்கப்பட்டுள்ளனர், தாக்கப்பட்டுள்ளனர். இது கவலை தருகிறது.
இது ஜனநாயக நாடு. அனைவருக்கும் இங்கு தனித் தனியாக கருத்துக்கள் உண்டு. அதை யாரும் மறந்து விடக் கூடாது. நமது முன்னோர்கள் இந்த பேச்சு சுதந்திரத்திற்காகத்தான் போராடினார்கள், உயிர்த் தியாகமும் செய்தார்கள். நாம் அனைவரும் இந்தியர்களாக இருக்க வேண்டும் என்றார் பிரியங்கா சோப்ரா.