காங்கிரஸ் கன்னத்தில் மக்கள் கொடுத்த 'பளார்'.. மோடி
வாரணாசி: தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பக்கம் நிற்காத கட்சிகளுக்கு மக்கள் இத்தேர்தலில் பலத்த அடி கொடுத்துள்ளனர். எதிர்க்கட்சி அந்தஸ்து கூட கிடைக்காத அளவுக்கு பலத்த அறை கொடுத்துள்ளனர் என்று நரேந்திர மோடி கூறியுள்ளார்.
வாரணாசிக்கு விஜயம் செய்த மோடி அங்கு நடந்த கங்கை ஆரத்தி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். மே 8ம் தேதி அவர் இங்கு ஆரத்தியில் கலந்து கொள்ள விரும்பியபோது தேர்தல் ஆணையம் அதற்குத் தடை விதித்து விட்டது. இந்த நிலையில் தற்போது வெற்றி பெற்றுள்ள நிலையில் நேற்று அவர் வாரணாசி போயிருந்தார்.
சுமார் ஒரு மணி நேரம் நடந்த பூஜை மற்றும் ஆரத்தியில் அவர் கலந்து கொண்டார். கட்சித் தலைவர் ராஜ்நாத் சிங், அமீத் ஷா சகிதம் கலந்து கொண்டார் மோடி.
சிவப்புக் கம்பள விரிப்புடன் மோடி ஆரத்தி நிகழ்ச்சிக்கு வரவேற்கப்பட்டார். அந்தப் பகுதியே மோடி வருகையால் காவி மயமாகியிருந்தது. அந்தப் பகுதியில் எப்போதும் அதிக அளவில் படகுகள் புழக்கம் இருக்கும். ஆனால் மோடி வருகை காரணமாக படகுகள் அப்புறப்படுத்தப்பட்டிருந்தன.
ஆரத்திக்கிப் பின்னர் மோடி பேசுகையில், நாட்டு மக்கள் எங்களுடன் சேராமல் தனித்து நின்றவர்களுக்கு இத்தேர்தலில் பலத்த அடி கொடுத்துள்ளனர். கன்னத்தில் அவர்களுக்கு சரியான அடி கொடுத்துள்ளனர்.
எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தைக் கூட அவர்களு மக்கள் தரவில்லை. இப்போது இந்த கட்சிகள் எல்லாம் ஒன்று கூடி ஒரு கூட்டணி அமைத்து, நாங்களும் எதிர்க்கட்சிதான் என்று மக்களிடம் காட்டிக் கொள்ள முயற்சிக்கும் என்றார்.
முன்னதாக டெல்லியில் கட்சி அலுவலகத்தில் அவர் பேசுகையில், பொதுத் தேர்தலில் மிகப் பெரிய வெற்றி கிடைக்க உழைத்த பாஜகவினருக்கு நான் நன்றி கூறிக் கொள்கிறேன். இது 125 கோடி இந்தியர்களுக்குக் கிடைத்த வெற்றி. அனைத்து இந்தியர்களுக்காகவும் நான் உழைக்கப் போகிறேன்.
இந்த வெற்றியை பல தலைமுறைகளாக கட்சிக்காக தியாகம் செய்து வந்த பாஜகவினருக்கு அர்ப்பணிக்கிறேன். 1952ம் ஆண்டு முதல் செய்து வந்த தியாகங்களுக்குக் கிடைத்த பலன்தான் இந்த வெற்றி என்றார் மோடி.