பெண் வன காவலர் பணிக்கு மார்பளவு.. ம.பி அரசின் மட்டமான விளம்பரம்
பெண் வன காவலர் பணிக்கான விளம்பரத்தில் குறிப்பிட்ட மார்பளவு கட்டாயம் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
மத்தியபிரதேசம்: ஆண் காவலர்களுக்கு நிர்ணயிப்பது போல பெண்களுக்கும் மார்பளவு நிர்ணயிக்கப்பட்டதற்கு பல்வேறு அமைப்பினரும், மகளிர் சங்கங்களும் கண்டனம் தெரிவித்துள்ளன.
பப்பிளிக் சர்வீஸ் கமிஷன் எனப்படும் மாநில அரசு வேலை வாய்ப்பு ஆணையம் மூலமாக வன அலுவலர் மற்றும் காவலர்களுக்கான பணியிடங்கள் நிரப்பும் பணியில் மத்திய பிரதேச அரசு மும்முரம் காட்டி வருகிறது. இதன் ஒரு பகுதியாக தினசரிகளில் பெண் வன அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கான காலி பணியிடங்கள் தொடர்பான விளம்பரம் வெளியிடப்பட்டது.
அந்த விளம்பரத்தில் பெண்களுக்கு மார்பளவு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், விண்ணப்பிக்கும் அனைவரின் மார்பளவு 74 சென்டிமீட்டரும், விரிந்த நிலையில் 79 சென்டி மீட்டரும் இருக்க வேண்டியது கட்டாயம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும் இந்த மார்பளவிலிருந்து குறைந்து இருந்தால், எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றால் கூட அவர்கள் பணியில் சேர்த்துக்கொள்ளப்பட மாட்டார்கள் என்று விளம்பரத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அரசின் இந்த விளம்பரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஆண்களுக்கு நிர்ணயிப்பதைப் போல பெண்களுக்கும் மார்பளவு நிர்ணயித்து இருப்பதற்கு பல்வேறு தரப்பினரும், மகளிர் அமைப்புகளும் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்த விளம்பரம் தொடர்பாக பிஎஸ்சி அமைப்பும், மத்திய அரசும் இதுவரை வாய்த்திறக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.