நிஜ “கத்தி” கதையைச் சுமக்கும் மோடி தொகுதி - கோகோ கோலா நிறுவனத்தை வெளியேற்றுவாரா?
வாரணாசி: வாரணாசியில் நிலத்தடி நீரை அதிக அளவில் உறிஞ்சி எடுப்பதால் பிரதமர் மோடியின் தொகுதியான அங்கு அமைந்துள்ள கோகோ கோலா நிறுவனத்திற்கு அப்பகுதியை சேர்ந்த மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
2014 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் உத்திரப் பிரதேசத்தின் வாரணாசி தொகுதியில் போட்டியிட்டு அமோக வெற்றி பெற்றார் மோடி.
இந்நிலையில் வாரணாசி மாவட்டத்தின் மேகதிகன்ஜி அப்குதியை சுற்றியுள்ள 18 கிராமங்களை சேர்ந்த தேர்ந்தெடுக்கப்பட்ட பஞ்சாயத்து தலைவர்கள் அப்பகுதியில் அமைந்துள்ள கோகோ கோலா தயாரிப்பு நிறுவனத்தை உடனடியாக மூடவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
தண்ணீர் பற்றாக்குறை:
கோகோ கோலா தயாரிப்பு நிறுவனம் நிலத்தடி நீரை உறிஞ்சி எடுத்து விடுவதால் தண்ணீர் பற்றாக்குறை நிலவுவதாக கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
நிறுவனத்தை மூடக் கோரிக்கை:
கோகோ கோலா நிறுவனம் தொடங்கப்பட்ட 1999 ஆம் ஆண்டு முதல் அப்பகுதியில் கடும் தண்ணீர் தட்டுபாட்டு நிலவுகிறது.
இந்த நிறுவனத்தை உடனடியாக மூடவேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
வறட்சி அபாயம்:
இல்லை என்றால் குடிநீர் முதல் விவசாயம் வரை அனைத்திற்கும் நிலத்தடி நீரை நம்பியிருக்கும் இப்பகுதி மக்கள் வறட்சியால் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக கிராமவாசிகள் தெரிவித்துள்ளனர்.
வெளியேற்றுவாரா மோடி?:
மேக் இன் இண்டியா திட்டத்தை தொடங்கி உலகின் பல நாடுகளுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு பன்னாட்டு நிறுவனங்களை இந்தியாவில் வந்து தொழில் தொடங்குங்கள் என்று அழைப்பு விடுத்துவரும் பிரதமர் மோடி, தனது சொந்த தொகுதியில் இருந்து ஒரு பன்னாட்டு நிறுவனத்தை வெளியேற்ற முயற்சி எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.