370-வது பிரிவை கோரும் கூட்டணி பாஜகவுக்குதான் எதிரானது- தேசத்துக்கு எதிரானது அல்ல: பரூக் அப்துல்லா
ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் மீண்டும் 370வது பிரிவை அமல்படுத்த கோரும் குப்கர் பிரகடனத்துக்கான மக்கள் கூட்டணி என்பது பாரதிய ஜனதா கட்சிக்குத்தான் எதிரானதே தவிர இந்த தேசத்துக்கு எதிரானது அல்ல என அம்மாநில முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா கூறியுள்ளார்.
ஜம்மு காஷ்மீரில் 7 அரசியல் கட்சிகள் இணைந்து குப்கர் பிரகடனத்துக்கான மக்கள் கூட்டணியை உருவாக்கி உள்ளன. ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியல் சாசனத்தின் 370வது பிரிவை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பதுதான் இந்த கூட்டணியின் கொள்கை.
இதனை பாரதிய ஜனதா கட்சி கடுமையாக எதிர்த்து வருகிறது. காங்கிரஸ் கட்சி தொடர்ச்சியாக இந்த கூட்டணியின் கூட்டங்களில் பங்கேற்காமல் புறக்கணித்து வருகிறது. ஆனால் இந்த கூட்டணிக்கு இதுவரை அதிகாரப்பூர்வமாக எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை.
பரூக் அப்துல்லா- மெகபூபா முப்தி
இந்த நிலையில் குப்கர் பிரகடனத்துக்கான மக்கள் கூட்டணியின் தலைவராக அம்மாநில முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த கூட்டணியின் துணைத் தலைவராக மற்றொரு முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி நியமிக்கப்பட்டிருக்கிறார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பரூக் அப்துல்லா கூறியதாவது:
பாஜகவுக்குதான் எதிர்ப்பு
குப்கர் பிரகடனத்துக்கான மக்கள் கூட்டணியை தேசவிரோத சக்தியாக பாஜக பொய்யான பிரசாரத்தை முன்னெடுத்து வருகிறது. இது உண்மை அல்ல. இந்த கூட்டணி நிச்சயம் பாஜகவுக்குத்தான் எதிரானது. தேசத்துக்கு எதிரானது அல்ல இந்த கூட்டணி.
தகர்க்கப்பட்டது கூட்டாட்சி முறை
அரசியல் சாசனத்தின் 370வது பிரிவை ரத்து செய்திருப்பதன் மூலம் தேசத்தின் கூட்டாட்சி அமைப்பு முறையை தகர்த்திருக்கிறது பாஜக. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை 2 கூறுகளாக பிரித்து யூனியன் பிரதேசங்களாக்கி இருக்கிறது பாஜக. இந்த தேசத்தின் அரசியல் சாசனத்தையே பாஜகதான் நிர்மூலமாக்கி இருக்கிறது.
உரிமை மீட்புதான் இலக்கு
நாட்டை துண்டு துண்டாக துண்டாட நினைக்கிறது பாஜக. எங்களைப் பொறுத்தவரை ஜம்மு, காஷ்மீர், லடாக் மக்கள் இழந்த உரிமைகளை மீண்டும் பெற வேண்டும் என்பதுதான் நோக்கம். எங்களுடைய யுத்த களமும் இதுதான். இதைத்தாண்டிய எந்த ஒரு கொள்கையும் எங்களுக்கும் இல்லை. ஜம்மு காஷ்மீரை மதரீதியாக பிரிக்கிறது பாஜக. ஆனால் எங்களது அடையாளத்துக்காக நாங்கள் போராடுகிறோம். இவ்வாறு பரூக் அப்துல்லா கூறினார்.