நம்முடைய நாட்டில் உள்ள விதவிதமான இடங்களை சுற்றிப் பாருங்கள்... மோடி சொல்கிறார்
கேதார்நாத்: இந்தியர்கள் இந்தியாவில் உள்ள விதவிதமான இடங்களை சுற்றிப் பார்க்க வேண்டும் என்று பிரதமர் மோடி விருப்பம் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி நேற்று கேதார்நாத் கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்தார். பின்னர் புனித குகையில் தியானத்தை மேற்கொண்டார். இன்று காலை தியானத்தை முடித்து விட்டு, மீண்டும் சாமி தரிசனம் செய்தார்.
மோடி வருகையையொட்டி அங்கு ஏராளமான பக்கதர்கள் குவிந்தனர். அவர்களை பார்த்து பிரதமர் மோடி உற்சாகமாக கையசைத்தார். இதனைத் தொடர்ந்து பேசிய அவர், நம்முடைய நாட்டு மக்கள் நமது நாட்டை பார்க்க வேண்டும் என்று விரும்புகிறேன் என்றார்.
மோடி தியானம் செய்த 'சொகுசு' குகையில் அடேங்கப்பா ஏற்பாடுகள்!
மோடி விருப்பம்
அவர்கள் வெளிநாடுகளுக்கு சுற்றுப் பயணம் செய்வது குறித்து எனக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை. ஆனால், அவர்கள் நம்முடைய நாட்டில் உள்ள விதவிதமான இடங்களுக்கு பயணம் செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தார்.
வெளிநாட்டுப் பயணங்கள்
பிரதமர் நரேந்திர மோடி 2014-ம் ஆண்டு மே மாதம் ஆட்சிக்கு வந்தது முதல் தற்போது வரை 443.4 கோடி ரூபாய்க்கு வெளிநாட்டுப் பயணங்கள் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சிகள் விமர்சனம்
2014-ம் ஆண்டு பிரதமர் மோடி தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்தது. ஆட்சிக்கு வந்தது முதல் பிரதமர் இந்தியாவிலிருந்ததை விட வெளிநாடுகளில் தான் அதிகம் இருந்துள்ளார் என்று எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனங்கள் செய்தன.
மத்திய அரசு விளக்கம்
எதிர்க்கட்சிகளின் இந்த விமர்சனங்களுக்கு பதிலளித்த மத்திய பாஜக அரசு, அதிக வெளிநாட்டுப் பயணங்களைப் பிரதமர் மோடி செய்திருந்த போதிலும், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் வெளிநாட்டு பயண செலவை விட 50 கோடி ரூபாய் செலவு குறைவு தான் என்றும், பிரதமர் மோடி செய்யும் வெளிநாட்டுப் பயணங்களால் இந்தியாவிற்கு புதிய தொழில் வாய்ப்புகள் கொண்டு வரப்பட்டுள்ளன எனவும் கூறியது.