பெரிய பாண்டியன் வழக்கில் முன்னேற்றம்: கொள்ளையனுக்கு அடைக்கலம் கொடுத்தவரை பிடித்து விசாரணை
ஜோத்பூர்: இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டியனை சுட்டுக் கொன்ற வழக்கின் முக்கிய குற்றவாளியான நாதுராமுக்கு அடைக்கலம் கொடுத்த ஒருவரை ராஜஸ்தான் போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சென்னை கொளத்தூரில் உள்ள நகைக்கடை ஒன்றில் நடந்த கொள்ளை வழக்கின் முக்கிய குற்றவாளிகளான நாதுராம், தினேஷ் சவுத்ரியை பிடிக்க இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டியன் ராஜஸ்தான் சென்றார்.
ராஜஸ்தானில் நாதுராம் இருக்கும் இடத்திற்கு சென்ற அவர் சுட்டுக் கொல்லப்பட்டார். பெரிய பாண்டியனுடன் சென்ற இன்ஸ்பெக்டர் முனிசேகரின் துப்பாக்கியில் இருந்து குண்டு பாய்ந்து அவர் இறந்துள்ளார்.
பெரிய பாண்டியனை யார் சுட்டது என்பது இன்னும் தெளிவாகவில்லை. இந்நிலையில் இது குறித்து விசாரணை நடத்த சென்னை இணை போலீஸ் கமிஷனர் சந்தோஷ் குமார் ராஜஸ்தான் சென்றுள்ளார்.
வழக்கு குறித்து அவர் கூறியதாவது,
பெரிய பாண்டியன் கொல்லப்பட்ட இடத்தை பார்வையிட்டேன். அவரை யார் சுட்டது என்பதை கண்டுபிடிக்க முயன்று கொண்டிருக்கிறோம். பெரிய பாண்டியனின் உடலில் பாய்ந்த குண்டு வெளியேறிவிட்டது. அந்த குண்டு இன்னும் கிடைக்கவில்லை.
சென்னை நகைக்கடை கொள்ளை வழக்கின் முக்கிய குற்றவாளிகள் நாதுராம் மற்றும் தினேஷ் சவுத்ரி. பெரிய பாண்டியன் சுட்டுக் கொல்லப்பட்டதில் தினேஷ் சவுத்ரிக்கு தொடர்பு இல்லை.
ஜோத்பூரில் கடை ஒன்றில் திருட முயன்றபோது தினேஷ் கைது செய்யப்பட்டுள்ளார். தினேஷை கைது செய்து நாங்கள் சென்னை அழைத்து வருவோம். நாதுராமுக்கு அடைக்கலம் கொடுத்த ஒருவரை பிடித்து ராஜஸ்தான் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர் விரைவில் கைது செய்யப்படுவார் என்றார்.