இந்திராணியை கழற்றிவிட முயன்றாரா பீட்டர் முகர்ஜி? இன்சூரன்ஸ் பாலிசியால் அம்பலம்
மும்பை: இன்சூரன்ஸ் தி்ட்டத்திற்கு, இந்திராணியை நாமினியாக நியமித்த அவரது கணவர் பீட்டர் முகர்ஜி, அதை நீக்க திட்டமிட்ட தகவல் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மும்பையை சேர்ந்த, ஷீனா போரா என்ற இளம் பெண்ணை கொலை செய்த வழக்கில் அவரது தாய் இந்திராணி கைது செய்யப்பட்டார். விசாரணை நடைபெற்ற நிலையில், அவரது கணவர் பீட்டர் முகர்ஜியும் சில தினங்கள் முன்பு கைது செய்யப்பட்டுள்ளார்.
போலீஸ் விசாரணையில் கிடைத்த தகவல்: பீட்டர் ஒரு இன்சூரன்ஸ் நிறுவனத்திடமிருந்து இரு இன்சூரன்ஸ் பாலிசிகளை, பெற்றிருந்தார். அதில் ஒரு இன்சூரன்ஸ் பாலிசி, பீட்டர் பெயரிலும், மற்றொன்று இந்திராணி பெயரிலும் வாங்கப்பட்டிருந்தது. மற்றொரு இன்சூரன்ஸ் நிறுவனத்திடமிருந்து தனது பெயருக்கு மட்டும் 2 வகை இன்சூரன்ஸ் பாலிசிகள் எடுத்திருந்தார் பீட்டர்.
அந்த இன்சூரன்ஸ் பாலிசியில் ஒன்று, பணம் திரும்ப கிடைக்கும் வசதி கொண்டது. இந்த பணம், பீட்டர்-இந்திராணி பெயரிலான ஜாயின்ட் அக்கவுண்ட் கணக்கிற்கு சென்றுகொண்டிருந்தது.
பீட்டர் தனது இன்சூரன்ஸ் திட்டங்களுக்கு நாமினியாக, இந்திராணி மற்றும் அவரது முன்னாள் கணவருக்கு பிறந்த வைதி என்ற மகள் பெயர் சேர்க்கப்பட்டிருந்தது. ஆனால், இந்திராணி சிபிஐயால் கைது செய்யப்பட்ட நிலையில், சமீபத்தில் இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு, போன் செய்த, பீட்டர் முகர்ஜி, தனது இன்சூரன்ஸ் நாமினிகளின் பெயர்களை, தனது மகன்கள் ராபின் மற்றும் ராகுல் ஆகியோர் பெயர்களில் மாற்றம் செய்ய முடியுமா என்று வினவியுள்ளார்.
இன்சூரன்ஸ் நிறுவனமும், அப்படியே செய்யலாம் என்று ஒப்புதல் வழங்கியுள்ளது. ஆனால் எழுத்துப்பூர்வமான வேண்டுகோளை கேட்டுள்ளது. ஆயினும் அந்த வேண்டுகோள் பீட்டர் தரப்பில் இருந்து தரப்படவில்லையாம். இந்த சம்பவத்தை வைத்து பார்க்கும்போது, இந்திராணியின் இந்திரஜால நடவடிக்கைகள் குறித்து தெரியவந்ததும், பயந்து போன பீட்டர், அவரிடமிருந்து தனது உறவை துண்டிக்க திட்டமிட்டிருக்கலாம் என்று தெரிகிறது.