சீதாராம் யெச்சூரி மீது தாக்குதல்.. பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு.. கேரளாவில் பதட்டம்
திருவனந்தபுரத்தில் உள்ள பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.
திருவனந்தபுரம்: கம்யூனிஸ்ட் கட்சி பொது செயலாளர் சீதாராம் யெச்சூரி மீது தாக்குதல் நடத்திய சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக திருவனந்தபுரத்தில் உள்ள பா.ஜ.க., அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் பதட்டம் நிலவுகிறது.
டெல்லியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியை 2 இளைஞர்கள் தாக்க முற்பட்டனர். அப்போது அவர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கு எதிராக கோஷமிட தொடங்கினர். 'மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஒழிக', 'இந்து சேனா வாழ்க' என்று கோஷமிட்டனர்.
உடனே அங்கிருந்த மார்க்சிஸ்ட் தொண்டர்கள், அந்த இருவரையும் தடுத்து நிறுத்தி, அடி, உதை கொடுத்தனர். இதன்பிறகு அவர்கள் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில் இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள பா.ஜ.க. அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதில் பாஜக அலுவலகம் இருந்த சேர் உள்ளிட்ட பொருட்கள் சேதமடைந்தது. இச்சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என கூறப்படுகிறது.
திருவனந்தபுரம் மட்டுமல்லாது கேரளாவில் மொத்தம் 4 இடங்களில் தாக்குதல் சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து பாதுகாப்புக்காக அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பதட்டமான சூழல் நிலவுகிறது.