பெட்ரோல் பங்குகளில் டெபிட், கிரெடிட் கார்டு பரிவர்த்தனைக்கு வரி கிடையாது.. மத்திய அரசு அறிவிப்பு
டெல்லி: பெட்ரோல் பங்குகளில் டெபிட் அல்லது கிரெடிட் கார்டுகள் மூலம் பணம் செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கு பண பரிவர்த்தனை கட்டணம் (சேவை வரி) வசூலிக்கப்படமாட்டாது என்று, மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
டிஜிட்டல் முறையிலான பண பரிவர்த்தனை மூலம், வரி ஏய்ப்பை கட்டுப்படுத்தலாம் என மத்திய அரசு முடிவு செய்துள்ளது. எனவே பண பரிவர்த்தனைகளுக்கு பல வகைகளிலும் முட்டுக் கட்டை போட்டுவரும் மத்திய அரசு, அனைவரையும் வங்கி வாயிலான பண பரிவர்த்தனைக்கு தூண்டி வருகிறது.
இதையடுத்து பெட்ரோல் பங்குகளில் கார்டுகள் மூலம் பரிவர்த்தனை செய்யும் வாடிக்கையாளர்களுக்கு 0.75 சதவீதம் தள்ளுபடி தரப்படும் என அறிவிக்கப்பட்டது. எனவே வாடிக்கையாளர்களும், ஆர்வத்தோடு கார்டுகள் மூலம் பரிவர்த்தனைகள் மேற்கொண்டனர்.
இந்நிலையில், கார்டு பரிவர்த்தனைக்கு 1 சதவீத சேவை கட்டணத்தை விதிப்பதாக வங்கியிலிருந்து, பெட்ரோல் பங்க் விற்பனையாளர்களுக்கு வந்த இ-மெயில் தகவல் அவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. எனவே கார்டு மூலமான பரிவர்த்தனையை நேற்று ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12 மணியுடன் நிறுத்த உள்ளதாக அறிவித்த பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள், மத்திய அரசின் கோரிக்கையை ஏற்று 13ம் தேதிவரை தங்கள் போராட்டத்தை ஒத்திப்போட்டனர்.
இந்த நிலையில், ஜனவரி 13ம் தேதிக்கு பிறகும், டெபிட், மற்றும் கிரெடிட் கார்டுகளுக்கு சேவை கட்டணம் கிடையாது என்று மத்திய பெட்ரோலிய அமைச்சர், தர்மேந்திர பிரதான் இன்று தெரிவித்துள்ளார். சேவை கட்டணத்தை பெட்ரோல் பங்க் உரிமையாளர்களும் செலுத்த தேவையிருக்காது என தர்மேந்திர பிரதான் வாக்குறுதியளித்துள்ளார்.
இதையேற்று, இனிமேல் தொடர்ந்து தடையின்றி கார்டுகள் மூலம் பரிவர்த்தனை செய்ய பெட்ரோல் பங்குகள் முன்வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.