பெட்ரோல் 32 காசு, டீசல் 85 காசு மட்டும் விலை குறைப்பு- கலால் வரி மீண்டும் உயர்வு!
டெல்லி: பெட்ரோல் விலை லிட்டருக்கு 32 காசும், டீசல் விலை லிட்டருக்கு 85 காசும் குறைக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு உயர்த்தியுள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே 15 நாட்களுக்கு ஒரு முறை நிர்ணயம் செய்து வருகின்றன.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 13 ஆண்டுகளில் இல்லாத அளவில் பேரல் ஒன்று 1,980 ரூபாயாக குறைந்துள்ளது. இதையடுத்து பெட்ரோல் விலை லிட்டருக்கு 32 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு 85 காசுகளும் குறைக்கப்பட்டுள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்தன.
இந்த விலை குறைப்பு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. இந்நிலையில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட உள்ள நிலையில் கலால் வரி உயர்த்தப்பட்டுள்ளது. பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு 75 பைசா உயர்த்தப்பட்டுள்ளது. டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ.1.83 உயர்த்தப்பட்டுள்ளது.
கலால் வரி உயர்வு காரணமாக நடப்பு நிதியாண்டில் அரசுக்கு கூடுதலாக ரூ.13,700 கோடி வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி உயர்த்தப்படுவது இது இரண்டாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.
பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை இம்மாதம் 3 ஆம் தேதி உயர்த்திய மத்திய அரசு, இரண்டு வாரங்களுக்குள்ளாக மீண்டும் உயர்த்தியிருக்கிறது. கடந்த 3 மாதங்களில் 4 முறை கலால் வரியை மத்திய அரசு உயர்த்தியிருக்கிறது.