ஒரு நல்ல செய்தி: பெட்ரோல், டீசல் விலையில் உயர்வு இல்லை
மும்பை: பெட்ரோல், டீசல் இன்று உயர்த்தப்படாதது வாகன ஓட்டுகளுக்கு நிம்மதி அளித்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் 1ம் தேதியில் இருந்து பெட்ரோல், டீசல் விலை தினமும் உயர்த்தப்பட்டு வருகிறது. தினமும் காலையில் எழுந்தவுடன் பெட்ரோல், டீசல் விலை உயர்வு செய்தியை பார்த்து வாகன ஓட்டிகள் வேதனை அடைகிறார்கள்.
இந்நிலையில் இன்று பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படவில்லை. அதனால் நேற்றைய விலைப்படி இன்று பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 85.47க்கும், டீசல் ரூ. 78.15க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மும்பையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ.90-ஐ தொடவுள்ளது.
இந்நிலையில் மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி, பெட்ரோல், டீசல் விலை ஒரேயடியாக உயர்ந்துள்ளது பொதுமக்களை பெரிதும் பாதித்துள்ளது என்றார்.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை குறையக்கூடும் என்று தனக்கு தகவல் கிடைத்துள்ளதாக தெரிவித்தார் கட்காரி.